Exclusive: "அட.. சசிகலா ரிசார்ட் பக்கமா கார்ல போனேன்.. கட்சிலருந்தே தூக்கிட்டாங்க" குமுறும் யுவராஜ்
பெங்களூர்: "சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட் பக்கம் காரில் போன காரணத்திற்காகவே கட்சி பதவியிலிருந்து நீக்கி விட்டார்களே.." என்று குமுறுகிறார் கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த எம்.பி.யுவராஜ்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு, பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளார் சசிகலா. வரும் 8ம் தேதி அவர் சென்னை செல்வார் என்று டிடிவி தினகரன் நேற்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான், இரு தினங்கள் முன்பு கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த எம்.பி.யுவராஜ் சசிகலா தங்கியுள்ள ரிசார்ட் அருகே தனது காரில் நின்றதாகவும், அவர் சசிகலாவை பார்க்க முயற்சி செய்ததாகவும் கூறி, ஒரு சில, டிவி சேனல்களில் செய்தி ஒளிபரப்பானது.

யுவராஜ் நீக்கம்
இந்த நிலையில்தான், யுவராஜை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்ட அறிக்கை நேற்று வெளியாகி இருந்தது. அதில் அவர்கள் குறிப்பிடுகையில், கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்கள் கோட்பாடுகளுக்கு, முரணான வகையில் செயல்பட்டு, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த யுவராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சுற்றுலா போனதுக்கு தண்டனையா
சசிகலா விவகாரத்தால் கர்நாடக அதிமுக வரை அதிர்வு ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிட்டது. இதுபற்றி 'ஒன்இந்தியா தமிழ்' சார்பில் யுவராஜை தொடர்பு கொண்டு கேட்டோம்: "நான் எந்த தப்பும் செய்யலிங்க.. இங்க சசிகலா தங்கியுள்ள ரிசார்ட், நந்தி ஹில்ஸ் அப்படீங்கிற சுற்றுலா தளத்திற்கு போகும் வழியில்தான் இருக்கு.. நான் என்னோட குடும்பத்தாரோட, கார்ல நந்தி ஹில் ஏரியாவுக்கு சுற்றுலாவுக்கு போய்க் கொண்டிருந்தேன். என்னோட கார்ல எப்போதுமே அதிமுக கொடி இருக்கும். ரிசார்ட் பக்கத்துல கார் போனப்போ, அதை வீடியோவா எடுத்து ஊடகத்தில் போட்டுட்டாங்க.. இதை காரணமா வைத்துதான், என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளாங்க" என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் யுவராஜ்.

ஜனநாயகம் இல்லை
"உங்களிடம், இந்த ஊடகச் செய்தி பற்றி ஏதாவது விளக்கம் கேட்கப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பிய போது, அதிமுக தலைமையிடம் இருந்து எனக்கு விளக்கம் கேட்டு யாரும் தொடர்பு கொள்ளவில்லை. தன்னிச்சையாக தன்னை நீக்கி அறிவித்துவிட்டார்கள். கட்சியில் எந்த ஒரு ஜனநாயகமும் இல்லை என்று ஆவேசப்பட்டார் யுவராஜ்.

தலைவர்களை உருவாக்கியது சசிகலா
"உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்ட போது?" கண்டிப்பாக சசிகலா பக்கம் தான் எனது ஆதரவு. ஒரு பெண்ணாக அதிமுக கட்சி வளர்ச்சிக்கு கடுமையாக பாடுபட்டவர் சசிகலா. பல தலைவர்களை உருவாக்கியது அவர்தான். நான்கு வருடங்களாக சிறைச்சாலையில் அவதிப்பட்டுள்ளார். மனசாட்சி அடிப்படையில் அவரை சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்றார் யுவராஜ்.

அமமுகவில் இணைவார்
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் ஷிமோகா சம்பத்திடம் தொடர்பு கொண்டு கேட்டோம். "சசிகலாவை சந்திப்பதற்கு யுவராஜ் உங்களுடன் தான் வந்ததாக தகவல் வெளியானதே" என்ற கேள்விக்கு, "அப்படியெல்லாம் இல்லைங்க.. நான் கூட்டிட்டு போகல. அவர் தனியாகத்தான் போயுள்ளார். ஆனால் அதிமுக அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications