"போலி ஆதார்.." பெங்களூர் குண்டுவெடிப்பு.. சென்னையில் தங்கிய குற்றவாளி? கூடவே இருந்த "அந்த" நபர் யார்
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குண்டு வைத்த நபர் குறித்து சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அதில் 9 பேர் பலியான நிலையில், குண்டுவைத்த நபரைக் கண்டறியத் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

குண்டு வைத்த அந்த நபர் சென்னையில் வந்து தங்கி இருந்ததாக இரு நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு: அதாவது பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர், சென்னையில் போலி ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அவருடன் மற்றொரு நபரும் உடன் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் அந்த நபர் வெறும் 9 நிமிடங்களில் குண்டை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை வைத்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். அந்த நபர் அணிந்திருந்த பேஸ்பால் தொப்பி தான் அதிகாரிகளுக்கு லீட்டாக இருந்தது. இது குறித்து விசாரித்ததில் அந்த நபர் கடந்த ஜனவரி மாதம் அந்த தொப்பியைச் சென்னையில் வாங்கியது தெரிய வந்தது.
என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: இதன் காரணமாகவே என்ஐஏ அதிகாரிகள் சென்னைக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். குண்டு வைத்த அந்த நபர் கர்நாடகாவின் ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் பிப்ரவரி 29ஆம் தேதி பெங்களூர் சென்ற நிலையில், அதற்கு முன்பு சுமார் ஒரு மாதம் சென்னையில் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போலிச் சான்றுகளைக் காட்டி அந்த நபர் சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதி அவர் திருப்பதி வழியாகப் பெங்களூர் சென்றதாகத் தெரிகிறது. அந்த நபர் பெங்களூருக்கு வந்து எங்கும் தங்கவில்லை. நேராக ராமேஸ்வரம் கஃபேவுக்கு சென்று குண்டு வைத்துவிட்டுச் சென்று இருக்கிறார். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது" என்றார்.
பேருந்துகள் மட்டும்: அந்த நபர் ராமேஸ்வரம் கஃபேவுக்கு செல்ல பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளார். முழுக் கை சட்டை, பேண்ட், தொப்பி, மாஸ்க், கண்ணாடி ஆகியவற்றை அணிந்தே அந்த நபர் ராமேஸ்வரம் கஃபேவுக்கு சென்றுள்ளார். காலை 11.35 மணிக்கு ஓட்டலுக்குள் நுழைந்து அந்த நபர் 11.45 மணிக்கு வெளியே வந்துவிட்டது சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.
அவர் வெளியே வந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து மதியம் 12.56 மணிக்கு அந்த வெடிக்குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். அதன் பிறகும் மீண்டும் பல்வேறு பேருந்துகளைப் பயன்படுத்தி அந்த நபர் பெங்களூரில் இருந்து வெளியேறி இருக்கிறார். அப்போது அவர் தனது சட்டை பல முறை மாற்றியுள்ளார். தொப்பியையும் தூக்கி எரிந்துவிட்டார். இந்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு 9 மணிக்கு பல்லாரி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் அந்த நபர் கடைசியாகத் தென்பட்டு இருக்கிறார். அதன் பிறகு அவர் எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. அந்த நபரைக் கண்டறியும் முயற்சியை அதிகாரிகள் இப்போது தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications