காதலனை கழட்டிவிட கூலிப்படையை நாடிய பெண் என்ஜினீயர்.. கடைசியில் ட்விஸ்ட்.. பெங்களூரில் ஷாக் சம்பவம்
பெங்களூர்: பெங்களூரில் காதலனை பிரேக் அப் செய்வதற்கு முடிவு செய்த பெண் என்ஜினீயர், தான் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அழிப்பதற்காக கூலிப்படைகளை ஏவி காதலனின் செல்போனை கொள்ளையடித்துள்ளார். கடைசியில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் காதலியின் குட்டு அம்பலமானது. இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த 4 பேர் மற்றும் பெண் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பெல்லந்தூர் பகுதியில் வசித்து வருபவர் வம்சி கிருஷ்ணா ரெட்டி (வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஸ்ருதி என்ற 26 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஸ்ருதியும் சாப்ட்வேர் என்ஜினீயர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வருவார்கள்.

அந்த வகையில் தான் கடந்த 20 ஆம் தேதி அன்றும் வம்சி கிருஷ்ணா ரெட்டியும் ஸ்ருதியும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது போகனஹள்ளி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியது. எனினும் காதலர்களுக்கு பெரிய அளவில் அடிபடவில்லை. அப்போது காரில் இருந்து வெளியே வந்த 4 பேர் வம்சி கிருஷ்ணா ரெட்டியிடம் தகராறு செய்தனர்.
காரில் சேதம் ஏற்பட்டதாகவும், அதற்கான தொகையை தருமாறும் பேசி வம்பு இழுத்தனர். பதிலுக்கு வம்சி கிருஷ்ணாவும் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் வம்சி கிருஷ்ணாவை தாக்கிய அந்த கும்பலினர் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் வம்சி கிருஷ்ணா கொள்ளை கும்பல் பற்றி போலீசிடம் புகார் செய்வோம் என்று காதலி ஸ்ருதியிடம் கூறினார். ஆனால் ஸ்ருதி போலீசுக்கு போக வேண்டாம் என்று கூறினார்.
வா.. வீட்டுக்கு போகலாம் என்று காதலனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்றார். மேலும் செல்போன் தானே.. இதற்காக ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டும்? என்று வம்சி கிருஷ்ணாவிடம் கூறினார். எனினும் சந்தேகம் அடைந்த வம்சி கிருஷ்ணா மறுநாள் காலையில் செல்போன் கொள்ளை போனது பற்றி போலீசில் புகார் அளித்தார். மேலும் அந்த காரின் நம்பரையும் போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் வம்சி கிருஷ்ணாவிடம் செல்போனை கொள்ளையடித்தது சுரேஷ், வெங்கடேஷ், மனோஜ், கொன்னப்பா ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், ஸ்ருதி தான் தங்களுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து வம்சி கிருஷ்ணாவிடம் இருந்து செல்போனை கொள்ளையடிக்க சொன்னார் என்ற ஷாக் தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து வம்சி கிருஷ்ணாவின் காதலி ஸ்ருதியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் பரபரப்பு தகவலை அவர் தெரிவித்தார். அதாவது ஸ்ருதி தனது காதலன் வம்சி பாலகிருஷ்ணாவை பிரேக் அப் செய்ய முடிவு செய்துள்ளார். உடனே பிரேக் அப் செய்துவிட்டால், அவரிடம் உள்ள நெருக்கமான புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி என்னை மிரட்ட வாய்ப்பு உள்ளது. இதனால் அவரது செல்போனை எடுத்துவிட்டால் இந்த பிரச்சினை வராது என்று ஸ்ருதி எண்ணியுள்ளார்.
இதற்காக தான் கூலிப்படையை அணுகியுள்ளார் ஸ்ருதி. அவர்களுக்கு ரூ.1 லட்சம் தருவதாக கூறி, வம்சி பாலகிருஷ்ணாவின் செல்போனை கொள்ளையடித்து செல்லுமாறு கூறியிருக்கிறார். அதன்படி தான் கடந்த 20 ஆம் தேதி வேண்டும் என்றே வம்சி கிருஷ்ணா மோட்டார் சைக்கிளில் கூலிப்படையினர் காரை மோதியதும், பின்பு அவர்கள் செல்போனை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கூலிப்படையினரிடம் இருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர். காதலனை பிரேக் அப் செய்ய சினிமா பாணியில் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றிய காதலி கடைசியில் போலீசில் சிக்கிக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications