லண்டனுக்கு அவசர அவசரமாக ஓடிய கோலி.. வலுவாக போடப்பட்ட ஆர்சிபி எப்ஐஆர்.. கைதாக வாய்ப்பு? விசாரணை?
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோலி கைது செய்யப்படுவாரா? அல்லது விசாரணை செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் கோலி அவசர அவசரமாக லண்டன் செல்வதற்காக இந்த விழா நடத்தப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு வருவதால் கோலி விசாரிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நைஜா ஹொரட்டகாரரா வேதிகே அமைப்பின் பிரதிநிதியாக ஏ.எம். வெங்கடேஷ் என்பவர் கபன் பூங்கா காவல் நிலையத்தில் அவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையுடன் (FIR) சேர்த்து இந்த புகாரும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது FIR
இந்த நெரிசல் தொடர்பாக கர்நாடக காவல்துறை பதிவு செய்துள்ள FIR-ல், குற்றம் சாட்டப்பட்டவர்களான RCB உரிமையாளர்கள், டிஎன்ஏ நிறுவனம் மற்றும் KSCA நிர்வாகக் குழுவினர் ஆகியோர் தேவையான அனுமதியின்றி வெற்றி விழாவை ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் 105 (கொலைக்குக் காரணமான குற்றமில்லாத மரணம்), 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 118(1) (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்துதல்), 118(2) பிரிவு 3(5)-உடன் இணைந்து (பொதுவான நோக்கத்திற்காக பல நபர்களால் செய்யப்படும்போது தானாக முன்வந்து பலத்த காயம் ஏற்படுத்துதல்), 190 (சட்டவிரோத கூட்டம்), 132 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 125(a) (பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல்), மற்றும் 125(b) (மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கபன் பூங்கா காவல் நிலையத்தில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரோலண்ட் கோம்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், RCB உரிமையாளர்கள், KSCA மற்றும் DNA மீது BNS பிரிவு 125(a) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் அளித்த புகாரில், "சமூக ஊடகத்தில் RCB வெளியிட்ட பதிவைப் பார்த்துவிட்டு எனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தைப் பார்க்க வந்தேன். திறந்த பேருந்தில் ஊர்வலம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நான் 17-வது கேட் வழியாக உள்ளே நுழையும்போது, அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, அதில் எனது தோள்பட்டை மூட்டு விலகியது" என்று கூறியுள்ளார்.
முதல்வர், துணை முதல்வர் மீது பாஜக புகார்
இதற்கிடையில், பாஜக பிரதிநிதிகள் கபன் பூங்கா காவல் நிலையத்திற்கு சென்று, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மீது FIR பதிவு செய்யக் கோரி புகார் அளித்தனர்.
புகார் அளித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாஜக எம்.எல்.சி என். ரவிக்குமார், "சமீபத்தில் நடந்த RCB வெற்றி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு மனசாட்சி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது மரியாதை இருந்தால், ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
மேலும், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி போலீஸ் அதிகாரிகள் ஏன் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உட்பட காவல்துறை அதிகாரிகள் இந்த நிகழ்வை நடத்த வேண்டாம் என்றும் 3-4 நாட்களுக்குப் பிறகு நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
கோலி கைதா?
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறுநாளே.. அதாவது நேற்றே விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனுக்குப் புறப்பட்டதை அறிந்த ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஒருவகையில் கோலியும்தான் காரணம். அதனால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications