நான் திராவிடன்.. பூர்வகுடி.. ஆரியர்கள் வந்தேறிகள்.. உரத்து முழங்கிய ’பகுத்தறிவாளர்' சித்தராமையா!
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக நாளை பதவியேற்கும் சித்தராமையா தம்மை ஒரு திராவிடன்; இந்த நிலத்தின் பூர்வகுடி என பிரகடனம் செய்த ஒரு பகுத்தறிவாளர் என்கின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்.
திராவிடம் என்பது தமிழ்நாட்டில் தெலுங்கு- கன்னடர்களால் பரப்பிவிடப்பட்ட ஒரு சித்தாந்தம் என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதுவதற்கு முன்னர், தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னரே திராவிட சொல் தமிழர் நிலத்தில் ஒட்டுமொத்தமாக பல மொழி பேசுகிற தமிழர்களைக் குறிக்கக் கூடிய பொது சொல்லாகவே இருந்து வந்துள்ளதை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமெ திராவிடம் என பேசப்படுகிறது; பிற தென்னிந்திய மாநிலங்கள் அப்படி பேசுவதில்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானாவில் பிரச்சனைகள் அடிப்படையில் திராவிடம் குரல் எழுவதும் திராவிட நாடு கோரிக்கை எழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு இப்படி ஒரு பிரச்சனையின் மையமாக இருந்தவர்தான் தற்போது அம்மாநில முதல்வராக பதவியேற்க இருக்கும் சித்தராமையா. கர்நாடகா முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, சித்தராமையா தம்மை முதலில் ஆரியரா? திராவிடரா? என சொல்லட்டும் என்றார். இதற்கு பதில் கொடுத்த சித்தராமையா, நான் ஒரு திராவிடன்; இந்த நிலத்தின் பூர்வகுடி; ஆரியர்கள் இந்த நிலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறிய வந்தேறிகள் என அழுத்தம் திருத்தமாக பிரகடனம் செய்தார். சித்தராமையாவின் இந்த திராவிடர் பிரகடனம், பல்வேறு விவாதங்களையும் எழுப்பி இருந்தது.
இதே சித்தராமையா ஆட்சிக் காலத்தில்தான் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே கர்நாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது, மறக்காமல் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்றார். அப்போது, திராவிடர் இயக்கத்தின் தந்தை பெரியார் அவர்கள்; திராவிட இனமக்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டவர் பெரியார் என புகழாரம் சூட்டினார் சித்தராமையா.
இதனால்தான் 2018 சட்டசபை தேர்தலின் போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கர்நாடக தேர்தலில் திராவிடர் கழகத் தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் சித்தராமையாவின் ஆட்சியையே மீண்டும் கொண்டுவர தெளிவாக வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரும், சீரிய பகுத்தறிவாளருமான சித்தராமையா தலைமையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கே கர்நாடக திராவிடர் கழகத்தவர்களும், கர்நாடகத் தமிழர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன் என அழுத்தம் திருத்தமாக கூறியிருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது
அத்துடன் இந்தி திணிப்பு, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு ஆகிய கொள்கைகளிலும் திராவிட சித்தாந்தத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பகுத்தறிவாளராகவும் திகழ்பவர் சித்தராமையா என்கின்றனர் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications