கர்நாடகா பாஜகவை அலறவிடும் காங்கிரஸ்! கலங்கும் ‛தாமரை’.. சுவரெங்கும் போஸ்டர்..எப்படி இருக்கு பாருங்க
பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது என்பதை கூறும் வகையில் கர்நாடகா பட்ஜெட் தாக்கலில் காங்கிரஸ் கட்சியின் காதில் பூ வைத்து பங்கேற்றனர்.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபையில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த வேளையில் பாஜக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களின் காதுகளில் காவி நிற பூக்களை சூடிக்கொண்டு பங்கேற்றனர். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக நூதனமான முறையில் ‛காது மேல் பூ' என்ற போஸ்டர் ஒட்டி வருவது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்துக்கு இன்னும் 3 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இருகட்சியினரும் தற்போதே தேர்தல் பணியை துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் நேற்று கர்நாடக சட்டசபையில் முதல் அமைச்சர் பசவராஜ்பொம்மை தனது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த வேளையில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவித்தார்.

காதில் பூவுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
முன்னதாக சட்டசபைக்கு எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் காவி நிற பூக்களை வைத்து கொண்டு சட்டசபைக்கு வந்தனர். தேர்தல் வருகிறது. பாஜகவினர் அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் காதுகளில் காவிநிற பூக்களை வைத்து வந்திருந்தனர். இதை பார்த்த முதல்வர் பசவராஜ் பொம்மை பூக்களை அகற்றும்படி கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுத்தனர்.

சட்டசபையில் வாக்குவாதம்
அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ‛‛இந்த அரசு தேர்தல் வேளையில் அறிவித்த வாக்குறுதி மற்றும் கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை இன்னும் நிறைவேற்றவில்லை. இருப்பினும் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறி வருவதோடு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இதில் இடம்பெற்றுள்ள திட்டங்களை இந்த அரசால் எப்படி செயல்படுத்த முடியும்?. மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம்'' என எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக காங்கிரஸ், பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

துவங்கிய போஸ்டர் யுத்தம்
இந்நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியினர் காதில் பூக்களோடு பங்கேற்றது தொடர்பான வீடியோ, போட்டோக்கள் இணையதளங்களில் டிரெண்ட் ஆகின. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக தற்போது நூதன பிரசாரத்தை துவக்கி உள்ளனர். அதாவது காதில் பூசுற்றும் பாஜக என்பதை பொதுமக்களிடம் எடுத்து கூறும் வகையில் கர்நாடகா தலைநகர் பெங்களூர் மற்றும் மங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நூதனமான போஸ்டர்களை ஒட்ட தொடங்கி உள்ளனர்.

போஸ்டர்களில் இருப்பது என்ன?
அதாவது நகரங்களில் ஆங்காங்கே பாஜக தலைவர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்கள் மீது தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய போஸ்டர்களை ஒட்ட தொடங்கி உள்ளனர். அந்த போஸ்டரில் பொறிக்கப்பட்டுள்ள உருவத்தின் காதில் பூ இருக்கும் நிலையில் ‛காதில் பூ சுற்றும் பாஜக' என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளதோடு, பாஜக நிறைவேற்றாத வாக்குறுதிகள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. விரைவில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் இத்தகைய செயல் பாஜகவினருக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக பசவராஜ் பொம்மையின் அரசு 40 சதவீத கமிஷன் பெற்று ஊழலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும் ஊழல் தொடர்பாக புகார் அளிக்க ‛40 சதவீத கமிஷன் அரசு' எனும் பெயரில் 40percentsarkara.com இணையதளத்தை காங்கிரஸ் கட்சி துவங்கியது. அதுமட்டுமின்றி பேடிஎம் ஸ்கேனர் போன்று PayCM எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படம் க்யூஆர் கோட் வடிவில் இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதை செல்போனில் ஸ்கேன் செய்தால் பாஜக அரசின் ஊழல் தொடர்பான புகாருக்காக காங்கிரஸ் கட்சி துவங்கிய இணையதளத்துக்கு செல்லும் வகையில் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் பாஜகவுக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications