பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி! ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பெங்களூர்: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாடன் தொகுதியின் முன்னாள் எம்பியும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு ஒரு நாளைக்கு ரூ 522 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை சிறைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பாலியல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது , படிக்க வழங்கப்பட்ட புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார். இதற்காக ஒரு நாளைக்கு ரூ 522 ஊதியம் வழங்கப்படும்.
சிறை விதிகளின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு வகையான வேலையை செய்ய வேண்டும். இது அவர்களது திறமை, விருப்பத்தை பொறுத்து வழங்கப்படுகிறது. இவ்வாறு சிறைத் துறையினர் தெரிவித்தனர்.
பெங்களூருவில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், பிரஜ்வல் ரேவண்ணா, 47 வயது வீட்டுப் பணியாளரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றங்களுக்காக அவர் ஆகஸ்ட் 2, 2025 அன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 376(2)(k) (அதிகாரத்தில் உள்ளவர் பாலியல் பலாத்காரம் செய்வது) மற்றும் பிரிவு 376(2)(n) (ஒரே பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்வது) ஆகியவற்றின் கீழ் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நீதிமன்றம் அவருக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையில், 7 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் கொடுத்த சாட்சியங்கள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் போன்றவை பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக வலுவான ஆதாரங்களாக இருந்தன. இந்த தீர்ப்பு, இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications