‛‛இந்த சாபம் தான் காரணம்’’.. இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மரணம் குறித்து பாஜக எம்பி ஹேக்டே சர்ச்சை
பெங்களூர்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தி மரணம் குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹேக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்கள் இறப்பதற்கு சாபம் தான் காரணம் என அவர் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
கர்நாடகா பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் அனந்தகுமார் ஹேக்டே. இவர் அங்குள்ள உத்தர கன்னடா தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இந்த தொகுதியில் இருந்து அவர் 6 வது முறையாக எம்பியாக இருக்கிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

இப்போது பாஜக எம்பியாக தொடர்ந்து வருகிறது. விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் அனந்தகுமார் ஹேக்டே உத்தர கன்னடா தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். இந்துத்துவா சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பகிரங்கமாக பேசும் தன்மை கொண்ட இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். இவர் கூறும் கருத்துகள் என்பது அடிக்கடி விவாதமாகி விடும்.
இந்நிலையில் தான் தற்போது அனந்தகுமார் ஹேக்டே பேசியது சர்ச்சையாகி உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தியின் மரணம் குறித்து அவர் பேசியிருப்பது தான் விவாதத்தை கிளப்பி உள்ளது. உத்தர கன்னடாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
‛‛இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது பல துறவிகள் உயிரிழந்தனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்திரா காந்தி முன்னிலையில் நூற்றுக்கணக்கான பசுக்கள் வெட்டப்பட்டன. மேலும் சுட்டு கொல்லப்பட்டன. அந்த சமயத்தில் துறவி கர்பத்ரி மகாராஜ் இந்திரா காந்தியை சபித்தார். 'கோபாஷ்டமி' நாளிலேயே உங்கள் குலம் அழிந்துவிடும் என்று சாபமிட்டார். அதைத் தொடர்ந்து இந்திரா காந்தி மகன் சஞ்சய் காந்தி கோபாஷ்டமி நாளில் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்திரா காந்தி கோபாஷ்டமி அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது உத்தர கன்னடா மாவட்டத்தில் பட்கல் என்ற இடம் உள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் நிறைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் பட்கல் பற்றி அவர் பேசுகையில், ‛‛பாபர் மசூதிக்கு ஏற்பட்ட நிலை தான் பட்கல் நகரில் உள்ள மசூதிக்கும் ஏற்படும். இது எனது முடிவு அல்ல. இந்து சமுதாயத்தின் முடிவு. இதை அச்சுறுத்தல் என்று கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம். மேலும் சிரசி சிபி பஜார் பகுதியில் ஒரு மசூதி உள்ளது. இதற்கு முன்பு அந்த இடத்தில் விஜய விட்டல் கோவில் இருந்தது. எங்களுக்கு எதிரி என்பது காங்கிரஸ் இல்லை. சிலரது மனநிலை தான்'' என காட்டமாக கூறியுள்ளார்.
அனந்தகுமார் ஹேக்டேவின் இந்த பேச்சு என்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுபற்றி கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அனந்தகுமார் ஹேக்டே அரசியல் நோக்கத்துக்காக பேசிய பேச்சு என்பது அவரது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மத்திய அமைச்சராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றுவேன் என்று கூறிய இவரிடம் நாகரீகமான கலாசாரத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன?'' என கூறியுள்ளார்.
அனந்தகுமார் ஹேக்டேவை பொறுத்தமட்டில் அவர் சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார். அரசிலமைப்பு சட்டத்தை மாற்றம் செய்வோம். தாஜ்மஹால் என்பது சிவன் கோவிலாக இருந்தது. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவது என்பது இந்துக்கள் மீதான பகல்நேர பலாத்காரம், ராகுல் காந்தியை கலப்பின தயாரிப்பு எனவும், முன்னாள் கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை தேசத்துரோகி எனவும், பாகிஸ்தானுக்கு செல்லும்படியும் கூறியது. அதோடு காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என தொடர்ந்து அவர் பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications