கர்நாடகா சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு இலவச சாப்பாடு- தூங்க சொகுசு சாய்வு இருக்கைகள்- ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிற்பகல் உணவு இடைவேளைக்கு பின்னரும் தொடர்ந்து வருகை தர வேண்டும் என்பதற்காக அங்கேயே இலவச சாப்பாடு மற்றும் சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதற்கு சாய்வு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநில சட்டசபை கூட்டங்களில், காலையில் ஆஜராகிவிடும் எம்.எல்.ஏக்கள் மதிய உணவுக்கு எம்.எல்.ஏக்கள் விடுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். அங்கு சாப்பிட்டுவிட்டு பிற்பகலில் நன்றாக உறங்கிவிடுகின்றனர். இதனால் பிற்பகலில் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடுகிறதாம்.

இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்திலேயே இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் யூடி காதர் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் கர்நாடகா சட்டசபை வளாகத்திலேயே எம்.எல்.ஏக்களுக்கு இலவச சாப்பாடு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் எம்.எல்.ஏக்கள் சிறிது நேரம் குட்டி தூக்கம் போட்டு அசதியைப் போக்க, சொகுசு சாய்வு நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. இந்த சொகுசு சாய்வு நாற்காலிகள் சட்டசபை வளாகத்தில் போடப்பட்டிருக்கின்றன. முதல் கட்டமாக தற்போது 10 சொகுசு சாய்வு நாற்காலிகள் அங்கே வரவழைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டசபை கூட்டமானது வரும் 20-ந் தேதி வரை நடைபெறும்.












Click it and Unblock the Notifications