ரைட்ல ஏன் வந்த?பெங்களூரில் தமிழ் பேசி கத்தியை காட்டி மிரட்டல்..ட்விட்டரால் சிக்கிய டிரைவர்! எப்படி?
பெங்களூர்: பெங்களூரில் நடுரோட்டில் ஸ்கூட்டர் மீது டாடாஏஸ் வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது டாடாஏஸ் டிரைவர் கத்தியை எடுத்து வந்து மிரட்டல் விடுத்தார். பட்டப்பகலில் பிஸியான ரோட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் ட்விட்டர் புகார் அடிப்படையில் தட்டிக்தூக்கினர்.
பெங்களூரில் வசித்து வருபவர் பிரகாஷ் ஷான். இவர் கடந்த 7 ம் தேதி தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் ராமமூர்த்தி நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது டாடாஏஸ் வாகனம் ஒன்று வந்தது.

திடீரென்று அந்த டாடா ஏஸ் வாகனம், ஸ்கூட்டர் மீது மோதியது. இதையடுத்து பிரகாஷ் ஷானின் தந்தை டாடாஏஸ் டிரைவரை கண்டித்தார். இதையடுத்து டாடாஏஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி வந்தார்.
பிரகாஷ் ஷானின் தந்தையும் ஸ்கூட்டரை நிறுத்தினார். இருவரும் நடுவழியில் டாடாஏஸ் மற்றும் ஸ்கூட்டரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டாடாஏஸ் டிரைவர் வாகனத்தில் இருந்த கத்தியை எடுத்து வந்து மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனை பிரகாஷ் ஷான் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

அதன்பிறகு இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும், ராமமூர்த்தி நகர் மேம்பாலத்தில் எனது தந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றேன். அப்போது செல்போன் பயன்படுத்தியபடி டாடாஏஸ் வாகனத்தில் வந்தவர் ஸ்கூட்டரில் மோதியதோடு கத்தி எடுத்து வந்து மிரட்டல் விடுத்தார் என தெரிவித்து இருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை பெங்களூர் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர், ‛‛ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் செல்போன் எண்ணை பதிவு செய்து புகார் அளிக்கும்படி கூறினார். மேலும் பெங்களூர் மாநகர போலீசாரும் உடனடியாக பிரகாஷ் ஷானை ட்விட்டரில் தொடர்பு கொண்டு தொடர்பு எண்ணை வழங்கும்படி கேட்டு கொண்டனர். மேலும் பிரகாஷ் ஷான் புகார் ராமமூர்த்தி நகர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் தான் பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியை காட்டி மிரட்டிய டாடா ஏஸ் டிரைவரை கேஆர்புரம் போக்குவரத்து போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவரை ராமமூர்த்தி நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து டாடாஏஸ் வாகனம், ஒரு கத்தி, ,ஒரு அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications