இது என்ன ஹேர் ஸ்டைல்? கடுப்பான தலைமை ஆசிரியர் செய்த செயல்.. கர்நாடகாவில் நடந்த பரபரப்பு சம்பவம்!
பெங்களூர்: கர்நாடகாவில் நடிகர்களின் ஹேர் ஸ்டைலுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் கடுப்பான தலைமை ஆசிரியர், இது குறித்து சலூன் கடை உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்த 'ஹெப்புலி' எனும் திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த திரைப்படத்தில் சுதீப்பின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். அதாவது ஒரு பக்கம் முக்கால்வாசி முடி வெட்டப்பட்டிருக்கும். அதேபோல மறு பக்கம் நீளமான முடி இருக்கும். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இளைஞர்கள் இதே ஹேர் ஸ்டைலை விரும்பி வெட்டிக்கொண்டனர்.

அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த படங்களில் இருந்ததை போல ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டனர். இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந்த ஹேர் ஸ்டைல் மீண்டும் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக பாகல்கோட் மாவட்டத்தின் குலஹள்ளி எனும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் சுதீப்பின் ஹேர் ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டிருக்கின்றனர். இது அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் இதுபோன்று முடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிக்கை மூலம் அறிவித்தார். ஆனாலும் மாணவர்கள் இதே ஹேர் ஸ்டைலில்தான் வந்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார். அதாவது கிராமத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளின் ஓனர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,
"மாணவர்கள் சினிமா நடிகர்களை போன்று முடியை வெட்டிக்கொண்டு வருகிறார்கள். இது படிப்பிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால் சக மாணவர்களின் படிப்பும் கெடுகிறது. அவர்கள் முழுக்க முழுக்க தலைமுடி எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே இப்படியான ஹேர் ஸ்டைல் கேட்டு வரும் மாணவர்களுக்கு அப்படி முடியை வெட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறி அவர்கள் வலியுறுத்தினால் அவர்களின் பெயர்களை எனக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை பெற்ற சலூன் கடைக்காரர்கள் தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications