நிரம்பி வழிந்த மடிவாலா ஏரி.. நகரத்துக்குள் வந்த வெள்ளத்தால் மூழ்கிய வீடுகள்.. பெங்களூரில் விடாத மழை!
பெங்களூர்: பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நகரத்தின் பல முக்கியமான பகுதிகள் நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. கேரளாவில் கனமழை காரணமாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பல பகுதிகளில் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கர்நாடகாவிலும் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்து வருகிறது.

கனமழை
முக்கியமாக பெங்களூரில் கடந்த 10 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 11ம் தேதி பெங்களூரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஏர்போர்ட் அருகே ஒரே நாளில் 178.3 மிமீ மழை பெய்தது. இதுதான் அந்த பகுதியில் 24 மணி நேரத்தில் பெய்த மிக அதிக மழை ஆகும். இதனால் ஏர்போர்ட் முழுக்க வெள்ளம் ஏற்பட்டது. ஏர்போர்ட் செல்லும் பாதையில் மொத்தமாக வெள்ள நீர் புகுந்தது.

வெள்ளம்
இதனால் ஏர்போர்ட்டிற்கு மக்கள் டிராக்டர் மூலம் செல்லும் அவலமும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக பெங்களூரின் பெரும்பான்மையான ஏரிகள் நிரம்பி உள்ளன. நேற்று பெங்களூரில் பிடிஎம் லே அவுட், எச்எஸ்ஆர், மடிவாலா, ஜேபி நகர், இந்திரா நகர், கோரமங்கலா, சாந்தி நகர் அதன் சுற்றுவட்டாரா பகுதிகள், ஜெயநகர், எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் இரவு முழுக்க விடாமல் கனமழை பெய்தது.

நிரம்பிய ஏரி
இதனால் பெங்களூரில் இருக்கும் மடிவாலா உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பின. ஏரிகள் நிரம்பிய காரணத்தால் நகரத்துக்குள் வெள்ளம் வந்து சாலையில் நீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நிரம்பிய காரணத்தால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல்வேறு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பார்க்கிங் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் சேதம் அடைந்தன.

சேதம்
ஏற்கனவே பெங்களூரில் கடந்த சில நாட்களாக அடுக்குமாடி குடியிருப்புகள் மோசமான கட்டுமானத்தால் ஆங்காங்கே இடிந்து விழுந்து கொண்டு இருக்கின்றன. தற்போது ஏற்பட்டு இருக்கும் வெள்ளம், மழை காரணமாக மேலும் பல கட்டுமானங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications