பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது
பெங்களூர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்து இருந்தது.
இருபினும் காற்றின் திசை மாறியதால் இன்று அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு
மழை
ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று இரவு முதல் மழையின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று இரவு நல்ல மழை பெய்த நிலையில், இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
ஆரஞ்சு அலர்ட்
முன்னதாக, பெங்களூருவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மழை அதிகம்
அக்டோபர் 15 முதல் 21ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்தில் வழக்கமான மழை அளவை விட 172 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் அவதி
மாலை நேரத்தில் பெங்களூருவில் பெய்துவரும் மழை காரணமாக, கல்லூரிகள், அலுவலகங்களிலிருந்து வீடு திரும்ப கூடியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் குளுகுளு வானிலை நிலவி வருகிறது.
5 நாட்கள் மழை
கிழக்கு மைய அரேபிய கடலில் இருந்து தெற்கு சத்தீஸ்கர் வரை கோவா, வடக்கு உள்கர்நாடகா மற்றும் தெலுங்கானா வரையிலான குறைந்த அழுத்தப் பகுதி நீடிக்கிறது. கர்நாடக மாநிலம் ஒட்டுமொத்தமாக அடுத்த ஐந்து நாட்களில் (அக்டோபர் 25 வரை) மிதமான முதல் கனமழை வரை பரவலாகப் பெற வாய்ப்புள்ளது. இது மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
"கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அனைத்து துறைகள் / அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது" என்று கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய இயக்குனர் சீனிவாஸ் ரெட்டி கூறினார்.