அப்போது சந்திரயான் 1, மங்கள்யான்! இப்போது ஆதித்யா எல்1.. அசத்தும் இஸ்ரோவின் PSLV வகை ராக்கெட்டுகள்
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இன்று ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இதனை PSLV-C57 ராக்கெட் தாங்கி செல்கிறது. PSLV ராக்கெட்டை பொறுத்த வரையில் 25வது பயணமாகும்.
பூமியின் வானிலையை கணிப்பதை போல விண்வெளிக்கும் வானிலை இருக்கிறது. இந்த வானிலையில் ஏற்படும் சில மாற்றங்கள் பூமியை கடுமையாக பாதிக்கலாம். அதாவது பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ள சூரியன்தான் இந்த விண்வெளி வானிலையை தீர்மானிக்கிறது. இதிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள், கதிர்வீச்சுகள், காந்த துகள்கள் ஆகியவை பூமியில் உள்ள மின்னணு பொருட்களை கடுமையாக பாதிக்கும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்தியா நீண்ட காலமாக திட்டமிட்டு வந்திருந்தது. அப்படி இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஆதித்யா எல்1 விண்கலம்.
இது இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இதில் மொத்தம் 7 கருவிகள் இருக்கின்றன. இந்த விண்கலத்தை விண்வெளிக்கு கொண்டு செல்ல PSLV-C57 பயண்படுத்தப்படுகிறது. PSLV வகை ராக்கெட் இஸ்ரோவின் நம்பகமான ராக்கெட்களில் முதன்மையானதாகும். இதை செல்லமாக 'நம்பகமான வேலை குதிரை' என்று இஸ்ரோ குறிப்பிடுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இது பயன்படுத்தப்பட்ட அனைத்து மிஷன்களும் சக்சஸ் ஆகியுள்ளன.
பூமியிலிருந்து சாதாரணமாக ஒரு பொருள் மேலே செல்ல வேணடும் எனில் அது விநாடிக்கு 11 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும். சாதாரண பொருளுக்கே இப்படியெனில், 1,480.7 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலத்தை பூமியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும் எனில் கூடுதல் உந்தவிசை தேவை. இப்படி இவ்வளவு வெயிட்டை தூக்கிக்கொண்டு போகதான் PSLV வகை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் மொத்தம் 4 கட்டங்கள் இருக்கின்றன.
முதல் கட்டத்தில் உந்துதலை அதிகப்படுத்த 6 என்ஜின்கள் இருக்கும். இரண்டாவது கட்டத்தில் 4 மூன்றாவது கட்டத்தில் 2, கடைசி கட்டத்தில் ஒன்று என என்ஜின்கள் இருக்கின்றன. PSLV வகையில் பல பிரிவுகள் இருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் 1 ஏவப்பட இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது. இது தவிர 2013ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட மங்கள்யான் திட்டம், 2022ம் ஆண்டு 6 செயற்கைக்கோள்களை கொண்டு சென்றது என பல மிஷன்களில் இந்த வகை ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று விண்ணில் ஏவப்படும் PSLV-C57 ராக்கெட் இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் 25வது PSLV வகை ராக்கெட்டாகும். ஆத்தியா எல்1 இன்று விண்வெளிக்கு ஏவப்பட்டாலும் அது நிர்ணயிக்கப்பட்ட இடத்தை சென்று சேர 4 மாதங்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications