"அவர்கள்" வெளியாட்கள்.. ஒரு ஹிஜாபுக்காக எங்கள் கல்வியை பாழாக்குகிறார்கள்.. மண்டியா மாணவி வேதனை
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மண்டியாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை இந்துத்துவா மாணவர்கள் முற்றுகையிட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த மாணவி விவரித்துள்ளார்.
Recommended Video
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த மாணவி தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அப்போது அங்கு வந்த இந்துத்துவா மாணவர்கள் சிலர் அந்த மாணவியை முற்றுகையிட்டனர்.
மேலும் அந்த மாணவியை பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அதற்கு அந்த மாணவியும் தைரியமாக பதிலுக்கு அல்லா ஹூ அக்பர் என்றார். நீண்ட தூரம் அவர் பின்னால் சென்று மாணவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை ஆசிரியர்
பின்னர் அங்கு வந்த கல்லூரி தலைமை ஆசிரியரும் ஊழியர்களும் மாணவர்களை கண்டித்தனர். அந்த மாணவியையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அந்த மாணவியின் பெயர் முஸ்கான். அவர் கல்லூரியில் நடந்தது என்ன என்பது குறித்து ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கல்லூரிக்கு புர்காவுடன்
அதில் அவர் கூறுகையில் நான் பர்தா அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வந்தேன். என்னுடைய அசைன்மென்ட் வொர்க்கை சமர்ப்பிப்பதற்காக வந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த சிலர் என்னை கல்லூரிக்குள் அனுமதி மறுத்தனர். புர்காவை நீக்கிவிட்டு கல்லூரிக்குள் வருமாறு மிரட்டினர்.

ஜெய்ஸ்ரீராம் கோஷம்
அதையும் மீறி நான் கல்லூரிக்குள் நுழைந்த போது அவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டனர். எனினும் கண்டு கொள்ளாமல் நான் பாட்டுக்கு சென்றேன். தொடர்ந்து அங்கு வந்த பலர் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டதால் நானும் அல்லா ஹூ அக்பர் என முழங்கினேன். நிறைய பேரை பார்த்தவுடன் அவர்களில் சிலர் விரல்களை உயர்த்தி காட்டிய போது சற்று பயமாக இருந்தது. ஆனால் எனது கல்லூரி முதல்வரும், ஊழியர்களும் என்னை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

ஹிஜாப்
அங்கு வந்த மாணவர்களில் எங்கள் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். காவி துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியாட்கள். எங்கள் கல்லூரியை சேர்ந்த இந்து மாணவர்கள் எனக்கு ஆதரவு தந்தார்கள். நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். முஸ்லீம் பெண்களுக்கு இந்த ஹிஜாப்பும், புர்காவும் முக்கியம். தலையில் அணியும் ஒரு சிறிய துணிக்காக (ஹிஜாப்) நாங்கள் கல்வி கற்பதை சிலர் பாழாக்குகிறார்கள் என அந்த மாணவி வேதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications