லீக்கான வீடியோ.. இந்துத்துவா மாணவர்களுக்கு காவி துண்டு, தொப்பி கொடுத்தது யார்? கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் போராடும் இந்துத்துவா மாணவர்களுக்கு சில அமைப்பினர் காவி துண்டு மற்றும் தொப்பிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மங்களூரில் இருக்கும் பியுகல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ , மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர். இதையடுத்து அங்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. இந்த 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு!
இந்த நிலையில் தற்போது கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக அங்கு இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றன. இது பல இடங்களில் கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் அங்கு பியு கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஹிஜாப்
இந்த நிலையில் நேற்று காவி உடை அணிந்த மாணவர்கள் பலர் நேற்று போராட்டம் முடிந்த பின் தங்கள் காவி உடைகள் மற்றும் தொப்பிகளை அங்கு இருந்த நபர் ஒருவரிடம் திருப்பி கொடுத்தனர். இந்த சம்பவம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உடுப்பியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு போராட்டம் நடத்திய இந்துத்துவா மாணவர்கள் நேற்று காவி துண்டு மற்றும் காவி நிறத்தில் வடஇந்திய திருமணங்களில் அணிவதை போன்ற தொப்பியை அணிந்து இருந்தனர்.
தொப்பிகள்
இதை அணிந்தபடிதான் இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போராட்டம் முடிந்து இவர்கள் வீட்டிற்கு திரும்பும் முன் அங்கிருந்த நபர் ஒருவரிடம் தங்களின் தொப்பிகள், துண்டுகளை திருப்பி கொடுத்துவிட்டு சென்றனர். அந்த நபர் இந்துத்துவா மாணவர்களை அழைத்து அவர்களிடம் இருந்து துண்டுகள், தொப்பிகளை வாங்கி ஒரு இடத்தில் குவித்துக்கொண்டு இருந்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
காவி துண்டு
மாணவர்களுக்கு இந்துத்துவா அமைப்பு ஒன்றுதான் இந்த காவி துண்டுகளையும், தொப்பிகளையும் கொடுத்துள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வீடியோ இணையம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இந்தியில் பேசும் நபர் ஒருவர்.. வாங்க.. வாங்க.. வந்து தொப்பியை இங்கே போடுங்க என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நபரிடம் இருந்து மாணவர்கள் துண்டுகள், தொப்பிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்துத்துவா அமைப்புகள்
இந்துத்துவா அமைப்புகள் சில திட்டமிட்டு இந்த போராட்டத்தை நடத்துவதாகவும். காவி துண்டுகள், தொப்பிகளை மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டு போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்புதான் இந்துத்துவா மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பின் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் வைத்தது குறிப்பிடத்தக்கது.