ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு போராடுவதால் கல்லூரி கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை.. மாணவிகள் குமுறல்
பெங்களூர்: தங்களை கல்லூரியில் உள்ள கழிவறைகளை கூட பயன்படுத்த அனுமதிப்பதில்லை என கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
கர்நாடகாவில் 10 -ஆம் வகுப்பிற்கு பிறகு 11, 12 ஆம் வகுப்புகளை ப்ரீ யூனிவர்சிட்டி காலேஜ் என அழைப்பார்கள். அவ்வாறு உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வரும் நிலையில் அண்மைக்காலமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஹிஜாப் அணிந்து வருவதை இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது.

கல்லூரி
உடுப்பியில் பைந்தூரில் உள்ள அரசு ப்ரீ யூனிவர்சிட்டி எனப்படும் பியு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த 6 மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்க வைக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. இவர்கள் சுமார் ஒன்றரை மாதங்களாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.

ஹிஜாப் அணிய தடை
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட கல்லூரிகளில் உடுப்பியில் இது 5ஆவது கல்லூரியாகும். ஏற்கெனவே உடுப்பி மாவட்டத்தில் குந்தாபூரில 3 கல்லூரிகளிலும் பைந்தூரில் மற்றொரு கல்லூரியிலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது எங்களின் உரிமை என கூறி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெங்களூர், மங்களூர், சிக்மக்ளூர் என ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிரஸ் கோடு
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என கூறி பெலகாவில் ராம்துர்கா நகரில் உள்ள பியு கல்லூரியின் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வருகிறார்கள். அது போல் இந்து மாணவிகளும் காவி நிற ஷால் அணிந்து கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை கல்லூரியின் டிரஸ் கோடு விதிகளை பின்பற்றுங்கள் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

போராட்டம்
இந்த நிலையில் கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய மாணவிகள் கன்னட தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் எங்கள் உரிமைக்காக போராடி வரும் எங்களை கல்லூரிக்குள் கழிப்பறையை பயன்படுத்தக் கூட அனுமதிப்பதில்லை. ஹிஜாப் இல்லாமல் வந்தால்தான் கல்லூரிக்குள் விடுவோம் என்று நிர்வாகம் தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் கழிவறையை பயன்படுத்தவாவது அனுமதிக்கலாம். ஆனால் அதை செய்யாததால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறையை பயன்படுத்தி வருகிறோம்.
Recommended Video

ஹிஜாப் விவகாரம்
அவர்களுடைய குழந்தைகளாக இருந்தால் இப்படித்தான் நடத்துவார்களா? யாசகம் கேட்பவர்கள் போன்று சாலையில் உட்கார்ந்து வருகிறோம். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா அரசோ அல்லது உயர்நீதிமன்றமோ தீர்ப்பளிக்கும் வரை எங்களை குற்றவாளிகள் போல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என கண்ணீர் மல்க மாணவிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications