இந்தி மொழி நீக்கம்.. பெங்களூர் விமான நிலையத்தில் இனி கன்னடம், ஆங்கிலம் மட்டும் தான்.. அதிரடி
பெங்களூர்: மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இப்படியான சூழலில் தான் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் அறிவிப்புகள் வெளியிடப்படும் பெயர் பலகையில் இருந்து இந்தி மொழி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிக்க முயல்கிறது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு கடுமையக குரல் கொடுத்து வருகிறது. மும்மொழி கொள்கையை எந்த காரணம் கொண்டும் ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி திமுகவினர் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டு இருந்த இந்தி எழுத்துகளையும் அழித்தனர்.
இந்நிலையில் தான் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் விமானங்களின் விபரங்கள் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பயணிகளுக்கு காண்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அதில் இருந்து இந்தி மொழி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. மாறாக ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழியில் மட்டுமே விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் விபரங்கள் இடம்பெற்றுள்ளது. அனைத்து அறிவிப்பு பலகையிலும் இந்த மாற்றம் என்பது செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இதற்கு கர்நாடகாவை சேர்ந்தவர்கள், கன்னட அமைப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். சைத்தன்யா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் இருந்து இந்தி மொழி நீக்கப்பட்டுள்ளது. கன்னடா மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது நல்ல முன்னேற்றம்'' என்று கூறியுள்ளார்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமித் சிங் என்பவர், ‛‛ஆங்கிலம் மற்றும் கன்னடம் தெரிந்தவர்கள் மட்டுமே பெங்களூருக்கு வருகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? மெட்ரோ நிலையத்தில் இந்தி இல்லாதது புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் அது விமான நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் இருக்க வேண்டும்'' என்று கொந்தளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications