இரக்கமே இல்லாமல்.. டூவீலரில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற நடிகை திவ்யா சுரேஷ்.. சிக்கவைத்த சிசிடிவி
பெங்களூர்: பெங்களூரில் டூவீலரில் 2 இளம்பெண்கள் உள்பட 3 பேர் சென்றனர். அப்போது அவர்களின் டூவீலர் மீது காரில் மோதிவிட்டு நிற்காமல் நடிகை திவ்யா சுரேஷ் சென்றார். இதில் ஒரு பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் நடிகை திவ்யா சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் விபத்து குறித்த திடுக்கிட வைக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
பெங்களூரில் வசித்து வருபவர் கிரண் (வயது 25). அனுஷா (24) மற்றும் அனிதா (33). இவர்கள் 3 பேரும் டூவீலரில் கடந்த அக்டோபர் 4ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பேடராயனபுரா பகுதியில் சென்று கொண்டிருந்தனர். கிரண் டூவீலரை ஓட்டினர். அனுஷா மற்றும் அனிதா ஆகியோர் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

அப்போது திடீரென்று தெருநாய்கள் குரைத்தன. இதனால் தெருநாய்களை தவிர்ப்பதற்காக அவர்கள் டூவீலரை திருப்பினர். அந்த இடத்தில் திருப்பம் இருந்தது. அப்போது அந்த திருப்பத்தில் இருந்து வந்த கருப்பு நிற கார் அவர்களின் டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரில் பயணித்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டன.
இதில் அனிதா படுகாயமடைந்தார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேவேளையில் கிரண் மற்றும் அனுஷா ஆகியோர் லேசான காயமடைந்தனர். அவர்கள் காரை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். ஆனால் காரை ஓட்டியவர் நிற்காமல் சென்றுவிட்டார்.
இதற்கிடையே எலும்பு முறிவு ஏற்பட்ட அனிதா வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவரை கிரண் மற்றும் அனுஷா ஆகியோர் மீட்டு பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அனிதா நலமாக உள்ளார். எலும்பு முறிவால் அவர் ஓய்வில் உள்ளார். இதுபற்றி பேடராயனபுரா போக்குவரத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவர் பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது கருப்பு நிற காரை பெண் ஒருவர் ஓட்டி சென்றது தெரியவந்தது. மேலும் அது கன்னட நடிகை திவ்யா சுரேஷின் கார் என்பதும், காரை திவ்யா சுரேஷ் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 281 (ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல்), 125 (ஏ) (உயிருக்கு அல்லது மனிதர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது திவ்யா சுரேஷின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications