காங்கிரஸ் கட்சிக்காக கர்நாடகாவில் களமிறங்கிய திமுக எம்.எல்.ஏ.! கன்னடத்தில் பேசி ஓட்டுவேட்டை!
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கன்னடத்தில் பேசி பிரச்சாரம் செய்திருக்கிறார்.
224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக கருத்துக்கணிப்புகள் கடைசி நேரத்தில் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜகவுக்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் உட்பட எண்ணற்ற அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாததால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. கர்நாடகாவில் திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சார மைக்குகள் அலறுகின்றன.

இந்நிலையில் பெங்களூரு நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, கர்நாடக எல்லையோர தொகுதியான ஒசூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கை சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு கன்னடத்தில் பேசி ஆதரவு திரட்டினார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் 4 நாட்களுக்கு முன்னர் தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் உடனடியாக பெங்களூருவில் களமிறங்கி பிரச்சாரம் செய்திருக்கிறார். கடந்த 2021 தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, ஒசூர் தொகுதியில் போட்டியிட்ட ஒய்.பிரகாஷ்க்கு ஓட்டுக் கேட்டு சித்தராமையா பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தான் சித்த ராமையாவுக்கு கைமாறு செய்யும் வகையில் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷ் கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications