தெய்வமாக வந்த மருத்துவர்கள்.! 2 வயது குழந்தைக்கு நடுவானில் நின்ற இதய துடிப்பு.. அடுத்த நொடி அதிசயம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்து டெல்லிக்குச் சென்ற குழந்தையின் இதயத் துடிப்பு நடுவானில் திடீரென நின்றுவிட்டது. அதன் பிறகு அங்கு நடந்த சம்பவம் தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நீண்ட தூரப் பயணங்களுக்கு இப்போது விமான பயணத்தையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு,வேகம் என இதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். அதேநேரம் அத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பரப்பதால் சில சமயம் இதனால் சில பிரச்சினைகளும் கூட ஏற்படும்.

அப்படி தான் திடீரென 2 வயதுக் குழந்தை ஒன்றுக்கு நடுவானில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அங்கே அடுத்து நடந்த சம்பவம் தான் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை: பெங்களூரில் இருந்து டெல்லிக்குச் சென்ற விமானத்தில் இதய கோளாறு இருக்கும் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று பயணித்துள்ளது. அப்போது நடுவானில் திடீரென அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அது மூச்சு விடுவதையே கூட அப்படியே நிறுத்திவிட்டது.
இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட விஸ்தாரா விமானப் பணியாளர்கள் விமானத்தில் டாக்டர்கள் யாராவது பயணிக்கிறார்களா என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அடுத்து அங்கு நடந்த சம்பவம் தான் நெகிழ்ச்சியின் உச்சமாக இருந்துள்ளது.
பிரச்சினை: குழந்தை நடுவானில் மூச்சு விடுவதை நிறுத்திய நிலையில், இது தொடர்பான அவசர அறிவிப்பை விமானப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். அப்போது நல்வாய்ப்பாக விமானத்தில் 5 மருத்துவர்கள் இருந்த நிலையில், அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்தக் குழந்தையை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தை டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.. இது தொடர்பான படம் ஒன்றை எய்ம்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் பெங்களூரில் நடந்த மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ளப் பெங்களூர் சென்றிருந்தனர். அதில் கலந்து கொண்டு அவர்கள் திரும்பிய அதே விமானத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் ஒரு மயக்க மருந்து வல்லுநர் மற்றும் இதய கதிரியக்க மருத்துவர் என மொத்தம் 5 மருத்துவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டதில் தான் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இது குறித்து டெல்லி எய்ம்ஸ் தனது ட்விட்டரில், "இன்ட்ரா கார்டியாக் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சயனோடிக் குழந்தை விமானத்தில் சுயநினைவை இழந்து.. மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். சயனோடிக் என்பது இதயக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தையைக் குறிக்கும் சொல்லாகும்.
குழந்தையை முதலில் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தைக்கு நாடித்துடிப்பு எதுவும் இருக்கவில்லை.. உடலும் கூட ரொம்பவே குளிர்ச்சியாக இருந்துள்ளது. குழந்தை சுவாசிக்கவில்லை.. குழந்தையின் உதடுகள் மற்றும் விரல்கள் சயனோசிஸ் காரணமாக நீல நிறத்தில் மாறி இருந்தது. பொதுவாக ரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தால் இந்தப் பிரச்சினை இருக்கும்.
நாக்பூரில் இறங்கிய விமானம்: இதையடுத்து மருத்துவர் குழு உடனடியாக குழந்தைக்கு முதலுதவி அளித்து சிகிச்சை கொடுத்துள்ளனர். பல நிமிடங்கள் தீவிர முயற்சிக்குப் பிறகு குழந்தை மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆனால், அத்துடன் பிரச்சினை சரியாகவில்லை. திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக நாக்பூருக்குத் திருப்பி விடப்பட்டது.
நாக்பூருக்கு செல்லவும் 45 நிமிடங்கள் ஆகும் என்ற நிலையில், குழந்தையைக் காக்க அந்த மருத்து குழு தீவிரமாக முயன்றது. மாரடைப்பு ஏற்படும் நபர்களைக் காப்பாற்ற அளிக்கப்படும் சிகிச்சை தரப்பட்டது. ஒரு வழியாக விமானம் நாக்பூரில் தரையிறங்கிய நிலையில், அங்கே குழந்தைக்குச் சிகிச்சை தர மருத்துவக் குழு தேவையான உபகரணங்கள் உடன் தயாராக இருந்தனர்.
அதற்குள் விமானத்தில் இருந்த மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையில் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராகவிட்டது. நடுவானில் பதறாமல் அந்த மருத்து குழு அளித்த சிகிச்சை காரணமாகவே குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. விமானத்தில் துரிதமாகச் செயல்பட்ட அந்த மருத்துவ குழுவினரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications