சித்தராமையா முதுகில் குத்த முடியாது.. ரகசிய மீட்டிங்கில் டிகே சிவக்குமாரிடம் நேரடியாக சொன்ன ஆதரவாளர்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை பிடிக்க துணை முதல்வர் டிகே சிவக்குமார் காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம் முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையா முயன்று வருகிறார். இந்நிலையில் தான் டிகே சிவக்குமார், சித்தராமையாவின் ஆதரவாளர்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதற்கிடையே தான் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளராக இருக்கும் அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி- டிகே சிவக்குமார் ஆகியோர் நள்ளிரவில் மீட்டிங் நடத்தி உள்ளனர். இந்த வேளையில் டிகே சிவக்குமார், சதீஷ் ஜார்கிகோளியிடம் ஆதரவு கோரிய நிலையில் அவர் சித்தராமையாவின் முதுகில் குத்த முடியாது என்று உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவியது.

இறுதியாக முதல்வர் பதவியை சித்தராமையா பெற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியோடு சேர்த்து துணை முதல்வர் பொறுப்பு டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
தற்போது இரண்டரை ஆண்டு கால ஆட்சியை டிகே சிவக்குமார் நிறைவு செய்துள்ளார். இதனால் மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலம் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இரண்டரை ஆண்டு கால முதல்வர் பதவி பகிர்வது பற்றி ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதன்படி சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும் டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இது கர்நாடகா அரசியலில் பெரும் அதிர்வலைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை பிடிக்கும் நோக்கில் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரி வருகிறார் டிகே சிவக்குமார்.
ஆனால் தற்போதைய சூழலில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள், டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் சித்தராமையாவின் பக்கமே உள்ளனர். அதுமட்டுமின்றி சித்தராமையாவின் ஆதரவாளர்களை தன்பக்கம் இழுக்க டிகே சிவக்குமார் முயன்று வருகிறார். அந்த வகையில் தான் தற்போது ரகசிய மீட்டிங் நடந்துள்ளது.
சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளர் சதீஷ் ஜார்கிகோளியை, டிகே சிவக்குமார் சந்தித்து பேசி உள்ளார். இந்த சதீஷ் ஜார்கிகோளி வடகர்நாடகா அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர். குறிப்பாக பெலகாவி தொகுதியில் அதிக செல்வாக்கு கொண்டவர். எமகனமரடி எனும் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள சதீஷ் ஜார்கிகோளி சித்தராமையாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். இவர் சித்தராமையாவின் தீவிர விசுவாசி.
சதீஷ் ஜார்கிகோளி கடந்த 2023 சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தார். காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமார் செயல்பட்டார். டிகே சிவக்குமாரின் கீழ் சதீஷ் ஜார்கிகோளி செயல் தலைவராக பணியாற்றினார். சதீஷ் ஜார்கிகோளியின் செயல்பாடு மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.
இந்நிலையில் தான் சதீஷ் ஜார்கிகோளியை, டிகே சிவக்குமார் தனியாக சந்தித்துள்ளார். இருவரும் நள்ளிரவில் நீண்ட நேரமாக ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது டிகே சிவக்குமார், ‛‛5-6 தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் இறுதியானது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் பதவியை என்னிடம் ஒப்படைப்பதாக சித்தராமையா கூறினார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்'' என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை சதீஷ் ஜார்கிகோளி ஏற்க மறுத்துள்ளார். நான் எந்த காரணம் கொண்டும் சித்தராமையாவை விட்டு தர முடியாது. இந்த இக்கட்டான சூழலில் சித்தராமையாவுக்கு பக்கப்பலமாக தான் இருக்க வேண்டும். என்னால் அவரை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. என்னை பொறுத்தவரை காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை கேட்பேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications