மின்துறையை தனியார்மயமாக்குங்கள்.. மத்திய அரசு அழுத்தம்.. விஜய் அதிரடி முடிவு
கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கேட்டுள்ளார். மறுபக்கம் ஏராளமான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. மின்சாரத்துறையில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகவும், தவெக அதில் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கோவை தொழில் அமைப்பினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய தொழில்துறையினர், "மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நிலை கட்டணம் 300% உயர்ந்துள்ளது. சோலார் ரூஃப் டாப்புக்காக வசூலிக்கப்படும் நெட்வொர்க் கட்டணத்தை நீக்க வேண்டும். அடுத்த 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. அரசு மற்றும் பொதுத்துறை டெண்டர்களில் உள்ளூர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

2 டிரில்லியன் பொருளாதாரம்
தொழில்துறையினரின் குறைகளை கேட்டு இறுதியாக பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "1.5 டிரில்லியன் பொருளாதாரம் இலக்கு வைத்துள்ளோம். உள்ளூர் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். நாட்டில் கோவை போல வேறு எங்கும் சிறு குறு நிறுவனங்கள் இல்லை. தவெக அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை கொண்டு வருவதில் உடன்பாடில்லை. கடந்த ஆட்சியில் அப்படி நிறைய செய்தனர். அதில் எந்த பயனும் இல்லை.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் அவர்களின் லாபத்தை மட்டும் தான் பார்ப்பார்கள். நம் உள்ளூர் நிறுவனங்களை ஊக்கப்படுத்தினால் பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்ட முடியும். கடந்த 15 வருடங்களாக இதை செய்யவில்லை. கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களை சிறந்த முறையில் வளர்ச்சி அடைய வைத்தால், 2 டிரில்லியன் பொருளாதாரத்தை கூட அடையலாம். அதற்கான சிறந்த கொள்கைகளை அரசு உருவாக்கி வருகிறது.
தனியார்மயம்
மின்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தவுள்ளோம். இதற்காக மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபடவுள்ளோம். மின்துறையை
காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் மின் விநியோகத்தை தனியாருக்கு கொடுக்க அழுத்தம் தரப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்குமே மின்சாரத்தை தனியார்மயம் ஆக்குவதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
50% ஆவது தனியார் மயமாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். நாங்கள் மின் விநியோகத்தை 100 சதவீதம் தனியாருக்கு தரமாட்டோம். தனியார் மயம் செல்வது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்துறைக்கு 2.5 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த இரண்டு வருடங்களில் கடனே வாங்க முடியாத நிலை உருவாகும். கடன் வாங்காமல் எப்படி துறையை நடத்த முடியும்.
டெண்டர் கொள்கை
இந்த வருடத்திற்குள் மின்வாரியத்தில் புதியதாக 20,000 பேரை பணியில் எடுக்கவுள்ளோம். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை சீரமைத்து, மின் கட்டணம் மற்றும் கணக்கீட்டு ஆகியவற்றில் உள்ள குளறுபடிகளை நீக்குவோம். ஒழுங்குமுறை ஆணையம் சீரானவுடன், மாதாந்திர மின் கட்டணம் உள்ளிட்ட தொழில்துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும். ஒரு சிலருக்கு மட்டும் சாதகமாக உள்ள டெண்டர் கொள்கைகளை நீக்கி வருகிறோம். மின் கொள்முதல் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
விரைவில் மின்துறையில் நிறைய மாற்றங்கள் நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளாக தொழில்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளன. மின்சார வாரியம் தொழில்துறைக்கு தேவையான ஆதரவை தரும். இந்த ஆட்சியில் எதையும் ஆறப்போட்டு செய்ய மாட்டோம். தினசரி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை தலைமை செயலகத்தில் மக்களின் கோரிக்கைகளை கேட்கிறோம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களை அணுகலாம். விரைவில் தொழில் துறைக்கான நெருக்கடிகள் விலகும்" என்றார்.












Click it and Unblock the Notifications