தந்தால் முதல்வர் பதவி தாங்க! இல்லைனா எதுவுமே வேண்டாம்! கார்கேவிடம் டிகே சிவக்குமார் அடம்! பரபர தகவல்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ள டிகே சிவக்குமார் இன்று கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார். இந்நிலையில் தான் முதல்வர் பதவி தான் வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு எதுவும் வேண்டாம் என மல்லிகார்ஜூன கார்கேவிடம் டிகே சிவக்குமார் அடம்பிடித்து உறுதியாக கூறியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி செய்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135, பாஜக 66, ஜேடிஎஸ் 19, மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவி மீது கண்வைத்து லாபி நடத்தி வருகின்றனர். இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேவை தனியாக சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை ஒரு மணிநேரம் வரை நீடித்தது. இந்த சந்திப்பின்போது முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும். தன்னால் காங்கிரஸ் கட்சி எப்படி லாபமடைந்தது என்பது பற்றியும், தனக்கு ஏன் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்து கூறினார்.
மேலும் தனக்கு ஏதேனும் பதவி வழங்க விரும்பினால் முதல்வர் பதவியை மட்டும் தாருங்கள். அதை விட்டுவிட்டு துணை முதல்வர், அமைச்சர் பதவி வழங்கினால் நான் ஏற்கமாட்டேன். மாறாக தொடர்ந்து நான் எம்எல்ஏவாகவும், தற்போது வகித்த வரும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது சித்தராமையாவுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் டிகே சிவக்குமார் இப்படி உறுதியாக கூறியுள்ளார்.
இதனால் தற்போது காங்கிரஸ் மேலிடம் விழி பிதுங்கி நிற்கிறது. அதாவது கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில் டிகே சிவக்குமாரின் பங்கு மிகப்பெரியது. இத்தகைய சூழலில் அவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் இருப்பது அவர் சார்ந்த ஒக்கலிகர் சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தும்.
பொதுவாக ஒக்கலிகர் சமுதாய ஓட்டுகள் ஜேடிஎஸ் கட்சிக்கு தான் அதிகம் கிடைக்கும். ஆனால் ஓல்டு மைசூர் பகுதியில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிகம் கிடைத்தது. இதற்கு பின்னால் டிகே சிவக்குமார் தான் உள்ளார். தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்பதை கூறியே அவர் பிரசாரம் செய்து வந்த நிலையில் தற்போது அது நிறைவேறாவிட்டால் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம். இதனால் காங்கிரஸ் மேலிடம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இதற்கிடையே தான் டிகே சிவக்குமார் சந்திப்பை தொடர்ந்து சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இந்த வேளையிலும் அவரும் கூட தனக்கு ஏன் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்பது பற்றி கார்கேவிடம் எடுத்து கூறுகிறார். கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியான நிலையில் முதல்வர் பதவி மீது டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ரிசல்ட் வெளியாகி இன்றோடு 3 நாள் முடியும் நிலையில் இருவரின் பிடிவாதத்தால் முதல்வர் யார்? என்பதை அறிவிப்பதில் காங்கிரஸ் மேலிடம் தாமதம் செய்து வருகிறது. இருப்பினும் கூட இன்று இரவுக்குள் முதல்வர் யார்? என்பதை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் இடையே ஒருமித்த கருத்து இன்று உருவாகாவிட்டால் அந்த அறிவிப்பும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications