யாரா இருந்தாலும் கை, கால்களை வெட்டுவேன்.. அரசு அதிகாரிகளை மிரட்டிய காங்.எம்எல்ஏ
பெங்களுரு:வனத்துறை அதிகாரியின் கை, கால்களை கண்டந்துண்டமாக வெட்டுவேன் என்று கர்நாடாகவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
சங்கமேஸ்வரா என்ற அந்த எம்எல்ஏ தான் இந்த மிரட்டலுக்கு சொந்தக்காரர் ஆவார். பத்ராவதி என்ற பகுதியில் கோயில் ஒன்றை எழுப்ப அப்பகுதி மக்கள் விரும்பியுள்ளனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோயிலை கட்டலாம் என்றும் அவர்கள் எண்ணியிருந்தனர்.
ஆனால், வனத்துறை சட்டத்தின் கீழ் கோயிலை நடத்த அனுமதி இல்லை என்று கூறி வனத்துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் எம்எல்ஏ சங்கமேஸ்வராவை சென்று சந்தித்து நிலைமையை விளக்கி உள்ளனர்.
வனத்துறை அதிகாரிகளின் தடையை கண்டு ஆவேசமடைந்த எம்எல்ஏ சங்கமேஸ்வரா, உடனடியாக கிராம மக்களுடன் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர் பேசிய பேச்சுகள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அவர் பேசியது இதுதான்:
கோயில் கட்டுவதை தடுக்கும் வனத்துறை அதிகாரி யாராக இருந்தாலும் கை, கால்களை வெட்டுவேன் என்று கர்ஜித்திருக்கிறார். கோயிலுக்கு அடிக்கல்லை நாட்டுவேன். கிராம மக்கள் கோயில் கட்டுமான பணிகளை தொடங்குவார்கள். எந்த அதிகாரியாவது தடுத்தால் கை, கால்களை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி ஒருமுறை சுட்டுத்தள்ளுங்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது அதேபோன்ற சர்ச்சை.. காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் பேச்சால் எழுந்திருக்கிறது.