டிகே சிவக்குமாருக்கு போட்டி.. கர்நாடகா முதல்வர் பதவி எனக்கு தான்.. யார் இந்த சதீஷ் ஜார்கிகோளி?
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையா தொடர்வாரா? இல்லாவிட்டால் அந்த பதவி டிகே சிவக்குமாருக்கு வழங்கப்படுமா? என்ற விவாதம் நடந்து வரும் நிலையில் 2018 தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவிக்கான ரேஸில் நானும் இருக்கிறேன். அப்போது முதல்வர் பதவி தரும்படி கேட்பேன் என்று கர்நாடகா பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார். இது டிகே சிவக்குமாருக்கு போட்டியாக பார்க்கப்படும் நிலையில் சித்தராமையாவின் ஆதரவாளரான சதீஷ் ஜார்கிகோளி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வர் டிகே சிவக்குமாரும் உள்ளார். டிகே சிவக்குமார் தற்போது காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல டிகே சிவக்குமாரின் பங்கு பெரிய அளவில் இருந்தது.

இதனால் முதல்வர் பதவியை அவர் கேட்டார். ஆனால் கட்சி மேலிடம் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்காமல் சித்தராமையாவிடம் கொடுத்தது. சித்தராமையா தற்போது இரண்டரை ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு டிகே சிவக்குமார் முதல்வராக உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டிலேயே இதுதொடர்பாக கட்சி மேலிடம் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் சித்தராமையாவே, 5 ஆண்டுகளும் நான் தான் முதல்வராக தொடர்வேன் என்று கூறியுள்ளார். சித்தராமையா சொல்வது நடக்கும் பட்சத்தில்2028 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்றால் மட்டுமே டிகே சிவக்குமாரால் முதல்வராக முடியும்.
இதற்கிடையே தான் தற்போது டிகே சிவக்குமாருக்கு போட்டியாக சதீஷ் ஜார்கிகோளி களமிறங்கி உள்ளார். இவர் யார் என்றால் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். பெலகாவி மாவட்டம் எமகனமரடி சட்டசபை தொகுதியில் 2008, 2013, 2018, 2013 தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
இவர் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர். பெலகாவி மாவட்ட அரசியலில் இவரது குடும்பம் செல்வாக்கு பெற்றுள்ளது. இந்நிலையில் தான் சதீஷ் ஜார்கிகோளி அளித்த பேட்டியில், ‛‛கர்நாடகாவில் அஹிண்டா (சிறுபான்மையினர் - பிற்படுத்தப்பட்டோர் - தலித் மக்களை அரவணைத்து செல்லும் தலைவர்) தலைவரை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.
நான் 2028 சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை மேலிடத்திடம் கேட்பேன். அதன் இறுதி முடிவு காங்கிரஸ் மேலிடம் சார்ந்தது. உண்மையில் 2028 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக நான் இருப்பேன். இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 30 மாதங்கள் வரை உள்ளது. அப்போது நிலைமை மாறலாம். முதல்வரை தேர்வு செய்வதில் எம்எல்ஏக்களின் பங்கு தான் மிகவும் முக்கியமானது '' என்றார்.
ஒருவேளை இந்த முறை முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட 2028 சட்டசபை தேர்தலில் வென்ற பிறகு முதல்வர் பதவியை எட்டிப்பிடித்து 5 ஆண்டு காலம் அரியணையில் அமரலாம் என்று டிகே சிவக்குமார் நினைத்துள்ளார். இப்படியான சூழலில் தான் டிகே சிவக்குமாருக்கு போட்டியாக சதீஷ் ஜார்கிகோளி முதல்வர் ரேஸில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருப்பதோடு, அனைவரிடமும் நன்றாக பழகும் தன்மை கொண்டவர். இதனால் சித்தராமையா அரசியலில் ஓய்வு பெறும்போது அவரது ஆதரவாளர்கள் சதீஷ் ஜார்கிகோளியுடன் கைகோர்க்கலாம் என்பதால் இது டிகே சிவக்குமாருக்கு தலைவலியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications