இப்படியே போனால் "யோகி மாடலை" கையில் எடுப்பேன்.. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
பெங்களூரு: கர்நாடகாவில் நிலைமை இப்படியே சென்றால் யோகி மாடலை கையில் எடுப்பேன் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடாவில் உள்ள மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பிரவீன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து சுல்லியா, கடபா மற்றும் புத்தூர் தாலுக்காக்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்புடன் பல இடங்களில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை கையில் எடுத்தனர். அப்போது முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இறுதி ஊர்வலம்
புத்தூரிலிருந்து மங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து போல்வார் என்ற பகுதியில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் காரணமாக சேதமடைந்தது. அதே நேரம் கொல்லப்பட்ட பிரவீன் நெட்டாரு உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான நெட்டாருவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மீதே தாக்குதல்
பிரவீன் நெட்டாருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக தலைவர் நலின் கடீல் மற்றும் மாநில அமைச்சரும் பாஜக மாவட்ட பொறுப்பாளருமான சுனில் குமார் வந்துகொண்டிருந்தனர். அப்போது புத்தூர் என்ற பகுதியில் அவர்கள் வந்த காரை சுற்றி வளைத்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இந்துத்துவா அமைபினர் தாக்குதல் நடத்தி காரை கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் தடியடி
பாஜக தலைவர், அமைச்சர் தாக்கப்பட்டதுடன் தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் போராட்டம் வன்முறையாக மாறியதால் தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்து விரட்டினர். மோதல் காரணமாக தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடையடைப்பு போராட்டம் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவே முழக்கங்களை எழுப்பினர்.

2 பேர் கைது
இதற்கிடையே சிக்மகளூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் உயிர்களை காக்க கட்சி தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜினாமா செய்துள்ளார். நவீன் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய கர்நாடக போலீசார், ஜாகிர் (29), ஷபீக் (27) ஆகிய இருவரை கைது செய்து உள்ளனர். இதுவரை 15 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடகா முதலமைச்சர் எச்சரிக்கை
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "24 மணி நேரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். நிலைமையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் எந்த செயல்பாடுகளையும் அரசு அனுமதிக்காது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

யோகி மாடல்
இதுபோன்ற நிலை கர்நாடகத்தில் தொடர்ந்தால், யோகியின் மாடலை கையில் எடுக்க வேண்டிய நிலை வரும்." என்றார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "மாநில அரசு அனைத்து அறிக்கைகளையும் அனுப்பி இருக்கிறது. அமைப்பை தடை செய்வது தொடர்பாக விரைவில் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications