குத்தகைக்கு வீடு தேடுறீங்களா? மக்களே கவனமாக இருங்க.. நூதனமாக ரூ.60 கோடி மோசடி செய்த நபர் - பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அதனை ஆன்லைனில் குத்தகை விடுவதாக விளம்பரம் செய்து ரூ.60 கோடியை தனியார் நிறுவன உரிமையாளர் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி பெங்களூரை அதிர வைத்துள்ளதோடு, குத்தகைக்கு வீடு தேடுவோருக்கு இந்த சம்பவம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல் வருமாறு:
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் ‛கேடினா ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை தொடங்கியவர் விவேக் கேசவன். இவர் தனது நிறுவனம் மூலம் ஆன்லைனில் வீடுகளை குத்தகைக்கு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

பெங்களூரில் ஐடி உள்பட பல பிரபல நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வேலை செய்வோர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.
மேலும் பலரும் ஆன்லைனில் வீடு தேடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தான் விவேக் கேசவன் ரூ.60 கோடி வரை மோசடி செய்துள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விவேக் கேசவன் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி, பானசவாடி, அம்ருதஹள்ளி, மாரத்தஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்துள்ளார்.
அதன்பிறகு அந்த வீடுகளை தனது நிறுவனம் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு குத்தகைக்கு விடுவார். அவர்கள் வழங்கும் குத்தகை பணத்தை வைத்து விவேக் கேசவன் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு முதல் 2 மாதம் வாடகை வழங்குவார். அதன்பிறகு வாடகை பணத்தை வழங்காமல் தலைமறைவாகி உள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் குடியிருக்கும் நபர்களிடம் வாடகை கேட்ட நிலையில் இந்த மோசடி வெளியே தெரியவந்துள்ளது.
விவேக் கேசவன் இப்படி பலபேரை ஏமாற்றி உள்ளார். ஏமாந்தவர்கள் உண்மையான வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்க மறுத்து வருகின்றனர். அதேவேளையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கறாராக கூறி வருகின்றனர். இதனால் விவேக் கேசவனிடம் குத்தகை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தான் விவேக் கேசவனிடம் ஏமாந்தவர்கள் எலக்ட்ரானிக் சிட்டி துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் விவேக் கேசவன் ரூ.60 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இன்னும் சிலர் ஏமாந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக் கேசவனை தேடி வருகின்றனர். இதனால் பெரிய பெரிய நகரங்களில் குத்தகைக்கு வீடு தேடுவோர் போலியான விளம்பரம், போலி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications