இஸ்ரேல் சுற்றுலா பயணி கூட்டு பலாத்காரம்.. 3 பேருக்கு தூக்கு தண்டனை.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்தாண்டு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளி மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து கொப்பல் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் இந்தியப் பெண் என இருவரைப் பலாத்காரம் செய்தது மற்றும் ஒரு இந்தியச் சுற்றுலாப் பயணியைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சுற்று பார்க்க வந்த சில வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்தாண்டு தாக்குதல் நடந்தது. கர்நாடகா மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில் தான் கொப்பல் நீதிமன்றம் அதிரடியாகக் குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை
ஹம்பியில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம், கொலை, தாக்குதல் மற்றும் கொள்ளை குற்றங்களுக்காக மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து கர்நாடக அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இஸ்ரேல் சுற்றுலாப் பயணி மற்றும் இந்திய ஹோட்டல் உரிமையாளர் மீது கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது, ஓர் இந்தியச் சுற்றுலாப் பயணியைக் கொலை செய்தது, அத்துடன் ஒரு அமெரிக்கச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது ஆகிய குற்றங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லேஷ் (எ) ஹந்திமல்லா, சாய், சரணப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தான் தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.
என்ன நடந்தது
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான ஹம்பிக்கு அருகிலுள்ள சனபுரத்தில் கடந்தாண்டு மார்ச் 6ம் தேதி இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது அங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் திறந்தவெளியில் நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருந்தனர். அங்குச் சென்ற மூவரும், அங்கிருந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கேட்டுள்ளனர்.
சம்பந்தமே இல்லாமல் பணம் கேட்டதால் சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சுற்றுலாப் பயணிகளைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். முதலில் இந்தக் கும்பல் அங்கிருந்த ஆண் சுற்றுலாப் பயணிகளைக் கால்வாயில் தள்ளிவிட்டுள்ளனர். பிறகு இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தாக்குதல்
கால்வாயில் தள்ளப்பட்ட ஆண் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் அமெரிக்காவின் டேனியல் பிடாஸ் (23) என்பவராகும். மேலும், மகாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த பங்கஜ் பாட்டில் (42), ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் குமார் நாயக் (26) ஆகியோரையும் தள்ளிவிட்டுள்ளனர். அவர்கள் கொடூரமாகத் தாக்கிய பிறகே கால்வாயில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் ஒடிசா இளைஞர் பிபாஷ் குமார் நாயக் பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் அவரது உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
உத்தரவு
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கொலை (பிரிவு 103), பாலியல் பலாத்காரம் (பிரிவு 70(1)) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவு செய்தது. இந்தியச் சுற்றுலா வழிகாட்டியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மல்லேஷ் மற்றும் சாய் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. இஸ்ரேல் சுற்றுலாப் பயணியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக (BNS பிரிவுகள் 70(1), 64(1) இன்படி) சாய் மற்றும் சரணப்பா ஆகியோருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை அரிதிலும் அரிய வழக்கு என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றவாளி மூவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர்.
கடந்தாண்டு கர்நாடகாவில் அரங்கேறிய இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹம்பி பகுதிக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கடுமையாகச் சரிந்தாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications