இந்திய வரலாற்றில் மற்றொரு சாதனை!.. சூரியனை நோக்கி பாயும் ஆதித்யா எல்1.. இஸ்ரோ சொன்ன குட்நியூஸ்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இதனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
நிலவு குறித்து இந்திய இலக்கியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேசியிருந்தாலும், இது தொடர்பான ஆய்வை நாம் தொடங்கியது என்னவோ கடந்த 2008ம் ஆண்டுதான். இந்த திட்டத்தின் நோக்கம் நிலவில் இருப்பதை உறுதி செய்வது. எதிர்பார்த்தபடி நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது.

இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளி வரும் காந்த புயல்தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.
இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான்.
சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 10.5 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி. பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.
இனி எதிர்காலமே சூரிய ஒளியாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில் இஸ்ரோவின் இந்த ஆதித்யா L1 விண்கலம் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யா எல்1 விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications