”சென்னை - குமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியம்” அமைச்சர் எ.வ.வேலு!
பெங்களூரு: சென்னை - கன்னியாகுமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியம் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். அதில் எ.வ.வேலு பேசுகையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 64 ஆயிரம் கிமீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது.. நிலங்களை கையகப்படுத்தி தான் ஆகணும்.. அமைச்சர் எ.வ.வேலு
எ.வ.வேலு பேச்சு
தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் மாவட்டம் மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளை 2026ம் ஆண்டுக்குள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 2,200 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலையாகவும், 6,700 கிமீ-க்கு 2 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.
2026க்குள் உயர்மட்ட பாலங்கள்
தொடர்ந்து தமிழ்நாட்டில், தற்போது உள்ள 1,280 தரைப்பாலங்களும், 2026ம் ஆண்டிற்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு செயலாக்கத்திற்காக சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க, சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு தொடர் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, 335 பொறியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
6 வழிச்சாலை அவசியம்
அதேபோல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை, கண்காணிக்க கிழக்கு கடற்கரை சாலையில், தானியங்கி வேக அமலாக்க அமைப்பு மற்றும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை - கன்னியாகுமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியமானது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரியகோயில் ஆகிய இரண்டு கோயில்களும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள்.
சுங்கக்கட்டணத்தில் விலக்கு தேவை
இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தி இரு வழித்தடச் சாலையாக, மேம்படுத்தப்படும் சாலைகளுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.