கன்னட முன்னணி நடிகர்கள், சிவராஜ்குமார், யஷ், சுதீப் வீடுகளில் ஐடி ரெய்டு!
பெங்களூர்: பெங்களூரில் நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், யஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடு உட்பட 25 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன்கள், சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார். இருவருமே முன்னணி நடிகர்கள் ஆகும். சமீபத்தில் வெளியான, 'கேஜிஎப்' திரைப்படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் யஷ் இவர்கள் வீடுகளில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
இதேபோல, 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம், தமிழக மக்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகர் சுதீப், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர்.மனோகர், ஜெயண்ணா, கேஜிஎப் திரைப்பட இணை தயாரிப்பாளர் விஜய் கிரங்காதர் ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் 25 இடங்களில் ரெய்டு நடத்தி வருவது கன்னட திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளில் ரெய்டு நடைபெறுகிறது.
யஷ் நடிப்பில் பல மொழிகளில், வெளியான கேஜிஎப், ரூ.150 கோடி வருமானம் ஈட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யஷ் சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு பழைய கடனை திரும்ப கொடுத்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று காலை முதல் பெங்களூரிலுள்ள சினிமா ஸ்டார்கள் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான பிற பகுதிகளிலும், வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுகிறது.