ஜெகதீஷ் ஷெட்டர் கமிஷன் வாங்க மறுத்தார்.. அதனால் தான் பாஜக அவரை ஒதுக்கியது.. ராகுல் பரபர விளக்கம்
பெங்களூர்: ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க பாஜக மறுத்து விட்டது. இதனால் அக்கட்சியில் இருந்து விலகிய அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் கமிஷன் வாங்க மறுத்ததால் பாஜக சீட் கொடுக்கவில்லை என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது.

இதனால், கர்நாடகாவை தேர்தல் புயல் மையம் கொண்டு விட்டது. ஆளும் பாஜக எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேஎடிஸ் ஆகிய கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த மேஜிக் எண்ணை தொட்டு விட வேண்டும் என்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதற்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மேல் மட்ட தலைவர்களும் கர்நாடகத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கந்ராடகாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கால் டவுன் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுகூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு குறைந்நது 150 இடங்களையாவது மக்கள் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யும். பாஜகவிற்கு 40 சீட்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம். ஊழலை பற்றி பேசும் பிரதமர் மோடி, 40 சதவீதம் கமிஷன் வாங்கும் தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார். ஊழலுக்கு எதிராக மோடி போராடவில்லை என்பதையே இது காட்டுகிறது. முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஊழலில் ஈடுபடுவதில்லை என்பதாலேயே அவருக்கு பாஜக டிக்கெட் கொடுக்க மறுத்தது.
ஜெகதீஷ் ஷெட்டர் 40 சதவீத கமிஷன் வாங்குவது இல்லை. மைசூர் சாண்டல் சோப் முறைகேடு வழக்கில் ஒரு எம்.எல்.ஏவின் மகன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதுபோல பல முறைகேடுகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சப் இன்ஸ்பெக்டர் முறைகேடு, துணை பேராசிரியர் முறைகேடு என சொல்லிக்கொண்டே போகலாம். பணத்தின் மூலம் எம்.எல்.ஏக்களை திருடி பாஜக முந்தைய ஆட்சியை அமைத்தது.
அது ஒரு திருடப்பட்ட அரசாங்கம். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக எந்த ஒரு ஒப்பந்தம் என்றாலும் 40 சதவிகித கமிஷன் பெற்றது. ஆனால் காங்கிரஸ் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறது" என்றார். முன்னதாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பு மறுத்தது.
இதனால், அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகினர். விலகிய மறுநாளே காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார். அவருக்கு உப்பள்ளி தர்வார்ட் மத்திய தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்தது. இந்த நிலையில் தான், மூத்த தலைவராக இருந்தும் பாஜக சீட் கொடுக்க மறுத்ததற்கு அவர் கமிஷன் வாங்க மறுத்ததே காரணம் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications