கர்நாடகாவுக்கு 3 மத்திய அமைச்சர் பதவி.. 2 பாஜக + ஒரு ஜேடிஎஸ்.. யாரெல்லாம் தெரியுமா? இதோ லிஸ்ட்
பெங்களூர்: இன்று 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் வரை மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் மோடியின் 3.0 ஆட்சியின் மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவில் இருந்து யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதனால் கூட்டணி கட்சிகளிடம் உள்ள 52 எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருடன் பாஜக எம்பிக்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் என மொத்தம் 30 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்களுக்கு நரேந்திர மோடி இன்று தேநீர் விருந்து அளித்தார்.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு தான் மத்திய அமைச்சராக இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கர்நாடகாவில் இருந்து யாருக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எச்டி குமாரசாமி. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான இவர் ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஆவார். குமாரசாமி ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் குமாரசாமி மண்டியா லோக்சபா தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது உறுதியாகி உள்ளது. இந்த கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ள நிலையில் குமாரசாமி இன்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்கிறார். இன்று நடந்த தேநீர் விருந்திலும் அவர் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கேபினட் பிரிவில் விவசாயத்துறை குமாரசாமிக்கு ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக இந்த பட்டியலில் இருப்பவர் பிரகலாத் ஜோஷி. கடந்த 5 ஆண்டுகளாக இவர் மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக செயல்பட்டார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் உப்பள்ளி -தார்வார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். கர்நாடகா பாஜகவில் சீனியர் தலைவராகவும், பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த இவர் இன்று பிரதமர் மோடியின் டீ பார்ட்டியில் பங்கேற்றார். இதனால் இவரும் மீண்டும் மத்திய அமைச்சராவது உறுதியாகி உள்ளது.
மேலும் பெலகாவி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் ஹாவேரி தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி வாகை சூடிய முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் டாப்பில் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ள லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதோடு பாஜகவின் மூத்த தலைவர்கள். இதனால் இவர்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுதவிர இந்த பட்டியலில் கோவிந்த் கார்ஜோள் என்பவரும் உள்ளார். இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக தேர்வாகி உள்ளது. கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவராகவும், தலித் தலைவராகவும் அறியப்படுகிறார். இதனால் தலித் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரையில் கோவிந்த் கார்ஜோளுக்கும் மத்திய அமைச்சர் பதவி என்பது வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை முதற்கட்ட அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது கர்நாடகாவில் இருந்து 3 பேரை மத்திய அமைச்சராக பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதில் குமாரசாமி, பிரகலாத் ஜோஷி ஆகியோரின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் அதேவேளையில் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, கோவிந்த கார்ஜோள் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த முறை கர்நாடகாவில் இருந்து பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான ஷோபா கரந்தலாஜே மத்திய இணை அமைச்சராக செயல்பட்டார். இன்று நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் அவர் பங்கேற்றார். ஆனாலும் கூட அவருக்கு இந்த முறை மத்திய அமைச்சர் பதவி கிடைக்காது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கூட்டணி கட்சியில் மத்திய அமைச்சர் பதவியை பெறும் குமாரசாமி ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோல் ேஷபா கரந்தலாஜேவும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் ஷோபாவுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கினால் ஒக்கலிகர் சமுதாயத்துக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகி விடும்.
அதோடு கர்நாடகாவில் ஒக்கலிகர் சமுதாயத்தினர் ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ள நிலையில் அதனை அங்குள்ள பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் சமுதாயத்தினர் ஏற்று கொள்ள மாட்டார்கள். அதோடு பாஜக மீது அவர்கள் அதிருப்தியை வெளிக்காட்டலாம். இதனால் ஷோபாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications