தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா? விஜய்க்கு கனிமொழி இரண்டு கேள்விகள்
சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா? என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் ஒவ்வொரு மாநிலமும் நியமிக்கும் கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவியாகும். இந்த பதவியில் ஜனநாயகன் தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட்நாராயணா நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தான் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய பாலமாக விளங்குவார். இப்பதவிக்கு முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அல்லது சட்டம் பயின்றவர்களை தமிழக அரசு நியமிப்பது வழக்கம் ஆகும். இதற்கு முன்னாள் டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஜக்கையன், செல்வேந்திரன், தளவாய் சுந்தரம் போன்றவர்கள் பணியாற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் ஏ.கே.எஸ்.விஜயன் அந்த பதவியில் இருந்து வந்தார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் பணி என்பது. மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்திற்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட அனுமதிகளை விரைவுபடுத்துவதுதான் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் பணியாகும். மேலும், மாநில அரசின் கோரிக்கைகள் மற்றும் முக்கியப் பிரச்சனைகளை மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்வார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
தமிழ்நாடு தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு நடத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பிரதிநிதி தான் பங்கேற்பார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி செல்லும்போது தேவையான ஏற்பாடுகளை டெல்லி சிறப்பு பிரதிநிதி தான் கவனிக்க வேண்டும். அமைச்சர் பதவிக்கு நிகரான இந்த பொறுப்பில் ஜனநாயகன் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படும் வெங்கட நாராயணாவை தமிழக அரசு நியமித்திருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.. பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
திமுக எம்பியான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.














Click it and Unblock the Notifications