பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. கண்கலங்கி நின்ற சாந்தனுவுக்கு ஆரத்தழுவி ஆறுதல்
சென்னை: மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
இயக்குனரும், நடிகரும், வசனகர்த்தரும், தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னருமாக அறியப்படும் கே பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இவரது மறைவு திரைத் துறையை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள், நடிகைகள், திரைப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கே பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே பாக்யராஜ் உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் அவரது மறைவு செய்தி அறிந்ததும் அங்கு குவியத் தொடங்கினர். பலரும் இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். ரோஜாப் பூ மாலை வைத்து அஞ்சலி செலுத்திய அவர், பாக்யராஜின் குடும்பத்தினருக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார்.

அப்போது தந்தையின் மறைவால் மிகுந்த துயரத்தில் இருந்த நடிகர் சாந்தனுவை முதல்வர் விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். இருவரும் சில நிமிடங்கள் உரையாடினர். பின்னர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினும் பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications