தாம்பரம் கழுகுமலையில் பயங்கரம்! குரங்குகள் விமலாவை சூழ்ந்ததுமே அலறி பள்ளத்தில் விழுந்து! சென்னை ஷாக்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்ற ஒரு பெண், எதிர்பாராத விதமாக குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும் பயத்திலும் நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. என்ன நடந்தது அந்த பெண்ணுக்கு?
பொதுவாகவே மலைக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்குக் குரங்குகளின் தொல்லை என்பது, பீதியையும், கலக்கத்தையும் தரக்கூடிய விஷயம்தான்.. அந்த குரங்குகளை சமாளிப்பதும் சவாலான விஷயமாகத்தான் இருந்து வருகிறது. அதுக்காக ஒரு உயிரையே பறிக்கும் அளவிற்கு போய்விடும் என்று யாருமே நினைக்கவில்லை.

சென்னை கழுகுமலை உச்சி
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் விமலா.. 45 வயதாகிறது.. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கழுகுமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார். வார இறுதி நாள் என்பதால், கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்துள்ளது.
விமலா மற்றும் அவரது குடும்பத்தினர் மலையின் உச்சிப் பகுதியில் உள்ள மூலவரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாதையின் ஒரு குறுகலான பகுதியில் அவர்கள் நடந்து சென்றபோது, திடீரென ஒரு பெரிய குரங்கு கூட்டம் அவர்களை நோக்கி வந்தது..
விமலாவை சுற்றிவளைத்த குரங்குகள்
மலைப்பகுதிகளில் கைகளில் பைகள், பிரசாத தட்டுகளை வைத்திருப்பவர்களை நோக்கி குரங்குகள் பாய்வது வழக்கம் என்பதால், விமலாவும் கையில் வைத்திருந்த சில பொருட்களை பாதுகாத்து கொள்ள முயன்றுள்ளார்.. .ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில், திபுதிபுவென 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் விமலாவை மொத்தமாக சுற்றிக்கொண்டன.. திடீரென குரங்குகள் சூழ்ந்ததுடன், சத்தம் போட்டுக் கொண்டே விமலாவை கடிக்கவும் பாய்ந்துள்ளன..
திடீரென இத்தனை குரங்குகள் ஆவேசமாக சூழ்ந்து கொண்டதால் விமலா நிலைதடுமாறிப் போனார். பயத்தில் கத்தி கூச்சல் போட்டால்.. அந்த குரங்குக் கூட்டத்திடமிருந்து தப்பிப்பதற்காக, பின்பக்கம் நகர நகர முயன்றார்.
பாதுகாப்பு தடுப்பு
அப்போது எதிர்பாராத விதமாக பாதையின் ஓரத்தில் இருந்த பாதுகாப்பு தடுப்பையும் தாண்டி, மலையின் செங்குத்தான உச்சிப் பகுதியிலிருந்து, கீழே ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்தார். விமலா மலையிலிருந்து கீழே விழுவதை பார்த்து குடும்பத்தினரும், அங்கு நின்றிருந்த மற்ற பக்தர்களும் அதிர்ச்சியில் உறைந்து கதறினார்கள்.
மலையின் உச்சியிலிருந்து விமலா கீழே விழுந்ததால், அவருக்குத் தலை, உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் கடும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. இதனால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இது குறித்து போலீசுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தந்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் மிகவும் சிரமப்பட்டுப் பள்ளத்தில் கிடந்த விமலாவின் உடலை மீட்டனர்.
சாமி கும்பிட போன இடத்தில்..
பிறகு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காகவும், அவரது உடலை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
கோவிலுக்கு சாமி கும்பிட போன இடத்தில், குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து போய் பெண் ஒருவர் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்த சம்பவம் சென்னைவாசிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளது.. மலைக்கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதற்காக கூடுதல் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....!!












Click it and Unblock the Notifications