ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை.. அன்பில் மகேஷ் பதிவு
திருச்சி: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்ற விஜய் அரசு, நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும் என்று முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பள்ளிக்கு செல்கிற குழந்தைகள் அனைவருக்குமே ஆண்டுதோறும் சாதி சான்றிதழை வாங்குவதற்கு மாற்றத்தை உருவாக்குதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளோம். அதில் மாணவர்களுடைய முகவரி, சாதி சான்றிதழ், ரத்த வகை, ஆதார் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்க உள்ளோம்" என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை வெளியிட்ட பதிவில், "மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!
மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மாண்புமிகு அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இதனிடைய இரண்டாவதாக அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், "ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை.. தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது "ஒரே நாடு ஒரே அடையாள அட்டை" என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
"இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்" எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications