5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி? புரோக்கர்களால் வீழ்ந்த 90ஸ் கிட்ஸ்கள்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் துமகூரு சேர்ந்த 80ஸ் கிட்ஸ் உள்பட 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கர் உள்பட 3 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். பெண் கிடைக்காத விரக்தியில் உள்ளவர்கள் குறிவைத்து ஏமாற்றி பெண் மற்றும் புரோக்கரை எப்படி போலீசார் கைது செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
80-களில் பிற்பாதியில் பிறந்த சிலருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.. இதேபோல் 90களில் பிறந்த பலருக்கு திருமணம் என்பது எட்டாத உயரத்திற்கு போய்விட்டது. ஏனெனில் சமுதாயத்தில் ஏற்பட்ட கல்வி புரட்சி திருமண ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. நன்கு படித்துவிட்ட இந்த கால பெண்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். இதனால் தனக்கு ஏற்ற நன்றாக படித்த சம்பாதிக்கக்கூடிய ஆண்களைத்தான் விரும்புகிறார்கள்.

அதேநேரம் தனக்கு வர வேண்டிய கணவன் அழகாகவும் நன்றாக படித்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் சாதாரணமாக படித்தவர்கள், கூலி வேலை செய்பவர்கள் பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அதேபோல் நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும், வயது மற்றும் அழகை பார்க்கும் பெண்கள், அவர்களையும் புறக்கணிக்கிறார்கள். இதனால் ஒரு தலைமுறையை பெண் கிடைக்காமல் தவிக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. கர்நாடகாவிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா அத்திகத்தே கிராமத்தை சேர்ந்த பாலக்ஷய்யா என்பவருடைய மகன் தயானந்த மூர்த்தி (வயது 37). இவருக்கு பாலாக்ஷய்யா நல்ல பொருத்தமான பெண்ணை தேடி வந்தார். ஆனால் அவருக்கு எந்த பெண்ணும் கிடைக்கவில்லை.
இதனால் பாலாக்ஷய்யா, தயானந்த மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் குஷ்டகியை சேர்ந்த பசவராஜ் என்பவர் மூலம் உப்பள்ளியை சேர்ந்த திருமண புரோக்கரான லட்சுமி என்பவர் அறிமுகம் ஆனார். அவரிடம் தனது குடும்ப சூழ்நிலையை கூறி, தனது மகனுக்கு பெண் பார்த்து கொடுக்கும்படி பாலாக்ஷய்யா கூறியுள்ளார்..
இதை கேட்ட லட்சுமி, சில நாட்கள் கழித்து பாலாக்ஷய்யாவை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.. உப்பள்ளியில் ஒரு நல்ல பெண் இருப்பதாகவும், அவருக்கு பெற்றோர் இல்லை என்றும், தானே அவருக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் பெண்ணுக்கு நகைகள் நீங்கள் தான் போட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் கோமலா என்ற பெயரில் பெண்ணின் படத்தையும் லட்சுமி அனுப்பி உள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 11-ந்தேதி லட்சுமி, கோமலாவையும் அவரது உறவினர்கள் 5 பேரையும் பாலக்ஷய்யாவின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து திருமண பேச்சுவார்த்தை நடந்தது. அனைவருக்கும் ஒத்துபோக, மறுநாள் அதாவது நவம்பர் 12-ந்தேதி தயானந்த மூர்த்திக்கும், கோமலாவுக்கும் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது. இதில் தயானந்த மூர்த்தியின் உறவினர்கள்,நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோமலாவுக்கு பாலாக்ஷய்யாவின் குடும்பத்தினர் தாலி உள்பட 25 கிராம் தங்க நகைகள் போட்டுள்ளனர். அத்துடன் புரோக்கர் லட்சுமிக்கு ரூ.1½ லட்சத்தையும் பாலாக்ஷய்யா கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த 2 நாட்கள் கழித்து, புரோக்கர் லட்சுமி மற்றும் கோமலாவின் குடும்பத்தினர் பாலாக்ஷய்யாவிடம் சென்று தங்கள் மரபுபடி திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு புதுப்பெண்ணை மட்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவதாக கூறியுள்ளார். இதற்கு பாலாக்ஷய்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் கோமலாவை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கோமலா திரும்பி வரவில்லை.
அதன்பிறகு கோமலா, புரோக்கர் லட்சுமி உள்பட யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போது தான் குடும்ப சூழ்நிலையை அறிந்து புரோக்கர் லட்சுமி, மணப்பெண் கோமலா ஆகியோர் நடித்து நகை-பணத்தை மோசடி செய்தது பாலாக்ஷய்யாவுக்கு தெரியவந்தது. தனது மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து வேதனைப்பட்ட பாலாக்ஷய்யா, குப்பி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவின் உப்பள்ளியில் பதுங்கி இருந்த புரோக்கர் லட்சுமி, மணப்பெண்ணாக நடித்த கோமலாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கோமலாவின் உண்மையான பெயர் லட்சுமி பலாசாப் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களுடன் உறவினர்கள் போல் நடித்து வந்த லட்சுமிபாய், சித்தப்பா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் போலீஸையே அதிரவைக்கும் வகையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, லட்சுமி பலாசாப், ஏற்கனவே 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணத்தை மோசடி செய்து கல்யாண ராணி என்பது தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக பெண் புரோக்கர் லட்சுமி உள்பட 3 பேர் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. கைதான 4 பேரிடமும் வேறுயாரை எல்லாம் ஏமாற்றினார்கள், எவ்வளவு பணம் நகை ஏமாற்றினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications