Thug Life படத்திற்கு கர்நாடகாவில் தடை! பிலிம் சேம்பர் தடாலடி அறிவிப்பு
பெங்களூர்: கன்னட மொழி விவகாரம் தொடர்பாகத் தனது பேச்சுக்குக் கமல் மன்னிப்பு தெரிவிக்க மறுப்பதால் கமல்ஹாசனின் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தக் லைப் பட ரிலீஸுக்கு தடை விதிப்பதாகக் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைப். நாயகன் படத்திற்குப் பின் சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் பேச்சு
இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற தக் லைப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், "தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ் குமார்) ஒப்புக் கொள்வார் என்றே நினைக்கிறேன்" எனப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைப் படத்தைக் கர்நாடகாவில் வெளியாக விடமாட்டோம் என பல்வேறு கன்னட அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்தன. அங்குள்ள அரசியல் கட்சிகளும் கூட கமல் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தன. அங்குள்ள காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளும் கமல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தக் லைப் படத்திற்குத் தடை
இதற்கிடையே கமல்ஹாசனின் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தக் லைப் பட ரிலீஸுக்கு தடை விதிப்பதாகக் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல் தனது பேச்சுக்குப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைப் படம் வெளியாகாது என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
கர்நாடக பிலிம் சேம்பர்
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பிலிம் சேம்பர் உறுப்பினர் சா ரா கோவிந்து தக் லைப் படத்திற்கான தடையை உறுதிப்படுத்தினார். கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகளுக்குத் துணையாக பிலிம் சேம்பர் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பது குறித்து எதையும் சொல்லவில்லை.. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை படத்தைக் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என்றார்..
கன்னட மொழியையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் கமல் அவமதித்துள்ளதாகவும் கமல் தனது கருத்துகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கர்நாடகாவில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளது.
கமல் திட்டவட்டம்
மறுபுறம் கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார். மொழிகள் தொடர்பாகத் தீவிர ஆய்வு நடத்திய வரலாற்று ஆய்வாளர்கள் கூறிய கருத்துகளையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்ல உரிமை இல்லை எனத் தெரிவித்தார். மேலும், அன்பின் வெளிப்பாடாகவே தான் அந்த கருத்துகளைக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார.












Click it and Unblock the Notifications