கமல்நாத் vs சிந்தியா, கெலாட் vs சச்சின், சித்து vs டிகேஎஸ்.. காங்கிரஸில் மாறாத காட்சிகள்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்தில் ஜெயித்த போதும், அங்குள்ள கோஷ்டி பூசல்கள் அந்த கட்சியை நிம்மதியாக ஆட்சியில் இருக்கும் சூழலை ஏற்படுத்துவது இல்லை. மூத்த தலைவர்கள் இளம் தலைவர்களுக்கு வழிவிட மறுப்பது ஒரு காரணம் என்றால், மறுபக்கம் இளம் தலைவர்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சம்பவங்களும் நடந்துள்ளன.
அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் vs ஜோதிராதித்யா சிந்தியா, ராஜஸ்தானில் அசோக் கெலாட் vs சச்சின் பைலைட்டை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் சித்தராமையா vs டிகே சிவகுமார் என்கிற வரை வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியால் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் இளம் தலைவராக வளர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராக ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு தராமல் கமல்நாத்திற்கு காங்கிரஸ் மேலிடம் தந்தது தான் காரணம். ஒரு காலக்கட்டத்தில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் ஜோதிராத்தியா ஐக்கியமானதால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
ராஜஸ்தானில் நிலைமை வேறுமாதிரி உள்ளது. அங்கு மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கும், இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் இன்று வரை இருந்து வருகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் தயாராக இல்லை என்கிற நிலையில், மோதல் வெடித்தது. ஆட்சி கவிழும் நிலை வந்தது.
காங்கிரஸ் மேலிடம் சச்சின் பைலெட்டை சமாதானம் செய்தது. விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர்களுடைய மோதலை காங்கிரஸ் மேலிடம் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது தெரியவில்லை.
பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோன்று பிரச்சனை தான் இருந்தது. கடந்த ஆட்சியில் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்தார். வெளிப்படையாகவே முதல்வர் அமரிந்தர்சிங்கை சித்து கடுமையாக விமர்சித்து வந்தார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும், சித்துவுக்கு ஆதரவாகச் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் என இரு பிரிவாகச் செயல்பட்டனர். கடைசியில் அங்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தான் வெற்றி பெற்றது.

கர்நாடகாவிலும் காங்கிரஸ் மூத்த தலைவரான சித்தராமையாவிற்கும், வளர்ந்து வரும் தலைவரான டிகே சிவகுமாருக்கும் இடையே இந்த முறை கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், கர்நாடாகவில் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வைத்த வேண்டுகோளை ஏற்று முதல்வர் பதவியை சித்தராமையாவிற்கு டிகே சிவகுமார் விட்டுக்கொடுத்துள்ளார். அதேநேரம் துணை முதல்வராக பதவியேற்கிறார். சச்சின், சிந்தியா போல் இல்லாமல் பக்குவமுடன் டிகே சிவகுமார் நடந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் எழவில்லை.
அதேநேரம் கர்நாடகா என்று இல்லை. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இதுவரை காங்கிரஸ் எடுத்த முடிவுகள் எல்லாமே அக்கட்சிக்கு பாதகமாகவே நடந்துள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க மறுத்ததால் அங்கு காங்கிரஸ் கட்சியை உடைத்து வெளியேறிய ஜெகன், ஆட்சியமைத்து முதல்வராகிவிட்டார். மூத்த தலைவர் என்று இல்லாமல், மக்கள் தலைவர்களை நோக்கி காங்கிரஸ் நகர்ந்தால் தான், காங்கிரஸ் வருங்காலத்தில மீண்டு வரும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications