ஹிஜாப் தடையை நீக்குவோம்.. ஹிஜாப் போராளி கனீஸ் பாத்திமா வெற்றி.. கர்நாடகாவில் முழக்கம்! சிதறும் பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் உரிமைக்காக போராடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனீஸ் பாத்திமா வெற்றிபெற்றுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏவான இவர் மீண்டும் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகி உள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
நேற்று அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து அங்கு முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பொம்மை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் சார்பாக சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ஹிஜாப் : கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என்று இஸ்லாமிய மாணவிகளும் அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி, ஜனநாயக அமைப்புகளும் உரிமை குரல் எழுப்பினர்.
இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கே பள்ளிகள் இதனால் போராட்ட களமாக மாறியது. முக்கியமாக இஸ்லாமிய மாணவிகள் சாலையில் அமர்ந்து நீண்ட நாட்கள் போராட்டம் செய்தனர். இது தேர்தலை மனதில் வைத்து பாஜகவால் செய்யப்படுகிறது.
மத பிரிவினை மூலம் வெற்றிபெற இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று கூறப்பட்டது. முக்கியமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்தது குந்தபுரா தொகுதியில்தான். அங்குதான் போராட்டம் தொடங்கியது.
இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடகா அரசு தடைவிதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் என்று கூறியிருந்தது. இதை எதிர்பார்க்காத மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த தடை செல்லும் என்று அறிவித்தது.
அங்கே கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயத்தில் பாஜக இந்த விவகாரம் பற்றி பேசாமல் ஒதுங்கியது.
பாஜக மூத்த தலைவர்களே எடியூரப்பா போன்றவர்கள் கூட ஹிஜாப் விவகாரத்திற்கு எதிராக பேசி பல்டி அடிக்க தொடங்கினர். அங்கே பாஜகவிற்கு எதிராக ஹிஜாப் விவகாரம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வி : அங்கே ஹிஜாப் தடைக்கு ஆதரவாக இருந்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் தீப்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். அவர் 53,753 வாக்குகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சதக்க்ஷரி 71,415 வாக்குகள் பெற்று வென்றார்.
இன்னொரு பக்கம் ஹிஜாப் உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்த காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா குல்பர்கா உத்தர் தொகுதியில் வெற்றிபெற்றார். 80973 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரகாந்த் பி பாட்டில் 78261 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அங்கே ஹிஜாப் தடை செய்தவர் தோல்வி அடைந்து இருப்பதும், எதிர்த்தவர் வென்று இருப்பது பாஜக கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பாடமாக மாறி உள்ளது.

கனீஸ் முழக்கம்: : தேர்தலில் வென்ற கனீஸ் அளித்த பேட்டியில், கடவுள் அருளால், வரும் நாட்களில் ஹிஜாப் தடையை நாங்கள் திரும்பப் பெறுவோம். மேலும் அந்த சிறுமிகளை மீண்டும் வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்வோம், அவர்கள் தேர்வுக்கு வர முடியும். அவர்கள் வாழ்க்கையை பின்பற்ற முடியும். அவர்கள் இரண்டு மதிப்புமிக்க ஆண்டுகளை இழந்துவிட்டனர், இனி அப்படி நடக்காது என்று பாத்திமா கூறினார்.












Click it and Unblock the Notifications