"இந்துத்வா குறித்த ட்விட்டால் வெடித்த சர்ச்சை" பிரபல கன்னட நடிகர் பெங்களூரில் கைது..14 நாள் ரிமாண்ட்
பெங்களூர்: இந்துத்வா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ட்விட் பதிவிட்ட பிரபல கன்னட நடிகர் சேதன் குமாரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பெங்களூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சேதன் குமாரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நிதிமன்றம் உத்தரவிட்டது.
பிரபல கன்னட நடிகர் சேதன் குமார். சேதன் அஹிம்ஷா என்று கன்னட சினிமா ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும் சேதன் குமார் கன்னட மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
கடந்த 2007- ஆம் ஆண்டு கன்னட திரைத்துறையில் அறிமுகமான சேதன் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னட நடிகர் சேதன் குமார்
தலித் மற்றும் பழங்குடியின ஆர்வலராக அறியப்படும் சேதன் குமார் சமூக செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சேதன் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பதிவு கர்நாடகாவில் பெரும் சரச்சையை கிளப்பி விட்டு இருக்கிறது. இந்துத்வா பொய்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சேதன் குமார் பதிவிட்டு இருந்தார். சேதன் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி?
இந்துத்வா பொய்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராவணணை வீழ்த்தி விட்டு அயோத்தியாவிற்கு ராமர் திரும்பிய பிறகு இந்திய தேசம் தொடங்கியதாக சவார்க்கர் கூறியது பொய். 1992-ல் ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி என்பது பொய்யான தகவல். உரிகவ்டா - நன்ஜேன் கவ்டா ஆகியோரும் திப்பு சுல்தானை கொலை செய்தவர்கள் என்று 2023ல் சொல்வதும் தவறு. இந்துத்வா உண்மையால் வீழ்த்தப்பட்டது. உண்மை என்பது சமத்துவம்" என்று பதிவிட்டு இருந்தார்.

சேதன் குமார் கைது
நடிகர் சேதன் குமாரின் இந்த ட்விட் பதிவு மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாகவும் காயப்படுத்தும் விதமாகவும் இருப்பதாக கூறி இந்துத்வா அமைப்புகள் பெங்களூரில் உள்ள ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையில் பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று சேதன் குமாரை கைது செய்தனர்.

14 நாட்கள் நீதிமன்ற காவல்
இதைத்தொடர்ந்து பெங்களூருவில் மாவட்ட நீதிமன்றத்தில் சேதன் குமரை போலீசார் ஆஜர்படுத்தினர். சேதன்கு மாரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நிதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, சேதன்குமாரை ஜாமினில் விடுவிக்கக் கோரி அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சேதன் குமார் சர்ச்சை கருத்துக்களால் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஹிஜாப் வழக்கு விசாரணையின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications