34 வயது இளம் நடிகர் திடீர் மரணம்.. மஞ்சள் காமாலையால் பிரிந்த உயிர்.. கண்ணீரில் திரையுலகம்
பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் சந்தோஷ் பாலராஜ் 34 வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்திருப்பது கன்னட திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட சினிமாவில் முக்கியமான ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவர் சந்தோஷ் பாலராஜ். பிரபல தயாரிப்பாளர் அனேகல் பாலராஜின் மகனான இவர், 2009ஆம் ஆண்டு கெம்பா என்ற படத்தின் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டார். தந்தையின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

இதன்பின் சந்தோஷ் பால்ராஜ் 2015ல் நடித்த கண்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தடுத்து ஜென்மா உள்ளிட்ட படங்கள் மூலமாகத் தொடர் ஹிட்களை கொடுத்தார். இதன்பின் 2017ஆம் ஆண்டு கரியா 2 என்ற திரைப்படம் மூலம் நல்ல அடையாளத்தைப் பெற்றார். அதுவே அவரின் கடைசி படமாகவும் அமைந்தது.
இதன்பின் 2022ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூரில் நடந்த கார் விபத்தில் சிக்கி அனேகல் பாலராஜ் உயிரிழந்தார். இதன்பின் சந்தோஷ் பாலராஜ் தாய் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக பெங்களூர் அப்போலோ மருத்துவமனையில் சந்தோஷ் பாலராஜ் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியுவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் பாலராஜ், திடீரென கோமாவுக்கு சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதன்பின் அவரின் உடல்நிலை சிகிச்சை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் சந்தோஷ் பாலராஜ் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. இதனால் கன்னட திரையுலமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
சந்தோஷ் பாலராஜின் மறைவுக்குக் கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ரசிகர்கள் சந்தோஷ் பாலராஜ்க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 34 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயால் நடிகர் சந்தோஷ் பாலராஜ் உயிரிழந்திருப்பது, உடல்நலம் குறித்து விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications