விவசாயிகள் பிரச்சினைக்கு அரசே பொறுப்பு..கன்னட திரையுலகிலிருந்து எழும் குரல்! சொல்வது சூப்பர் ஸ்டார்
பெங்களூர்: விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்று தமிழ் திரையுலகம், இந்தியத் திரையுலகம் உட்பட பல திரையுலகங்களைச் சேர்ந்த பல நடிகர்கள் பேச தயங்கி வரும் நிலையில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மற்றும் மறைந்த ஜாம்பவான் நடிகர் ராஜ்குமார் மகனான, சிவராஜ்குமார் இதைப் பற்றி பேசியுள்ளார்.
நாடு முழுக்க விவசாயிகள் பிரச்சினை, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தென் மாநிலங்களை பொறுத்தளவில் கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தீவிரமாக இருக்கிறது.
வட மாநிலங்களில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் பெரும் தீவிரமாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு எதிராக பாலிவுட்
இருப்பினும் இந்த பிரச்சனையில் ஆரம்பத்தில் யாரும் கருத்து சொல்லாத நிலையில் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகள் படும் துன்பங்களை தங்களது ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவிக்க ஆரம்பித்தனர். இதன் பிறகு பாலிவுட் நடிகர் நடிகைகளில் சிலர், இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை, நீங்கள் பேசக் கூடாது என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்களும் விவசாயிகள் பிரச்சினையை பற்றி வாய் திறப்பதில்லை.

சிவராஜ்குமார் சப்போர்ட்
இந்த நிலையில்தான் சிவராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் இதை செய்ய வேண்டும். உடனடியாக இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தியாக வேண்டும். நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

அரசுதான் பொறுப்பு
விவசாயிகள் மற்றும் இந்த சட்டம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்கள் இது பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில், அரசு மற்றும் விவசாயத் துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் விரைந்து ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் அரசுதான் பொறுப்பு. விவசாயிகள் பிரச்சினை பற்றி நடிகர்கள் பேசவேண்டும் என்று சொல்கிறார்கள். நடிகர்கள் பேசுவதால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?

உதவி செய்ய வேண்டும்
சினிமாத் துறையிலேயே தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இன்னமும் நிலுவையில் தானே இருக்கிறது. நாங்கள் அனைவருமே எங்களது ஆதரவை எப்போதுமே தந்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு தனிநபரும் பிறருக்காக உதவி செய்ய வேண்டும், ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கொள்கை எங்களுடையது. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அதற்கு வேறு வண்ணம் பூசக்கூடாது.

யதார்த்தம்
நடிகர்கள் ஆதரவு அளித்து விட்டால் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடும் என்று யாராவது எனக்கு உறுதி அளிக்க முன்வந்தால் நான் எழுத்துப்பூர்வமாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்க தயார். ஆனால் நடிகர்கள் மேடையேறி போராட்டம் நடத்தி விட்டால் ஒரு பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. நிஜ நிலவரம் என்ன என்பதை அனைவரும் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள். இவ்வாறு சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications