மேகதாது அணைக்காக நாளை பந்த்… அறிவித்த வாட்டாள் நாகராஜ்.. தமிழக எல்லையில் பற்றிக் கொண்ட பதற்றம்
Recommended Video

பெங்களுரு:மேகதாதுவில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கா விட்டால், அதற்கான பணியை நாங்களே தொடங்குவோம் என்று அறிவித்துள்ள வாட்டாள் நாகராஜ் நாளை அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவிரி பிரச்னை ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருந்து வருகிறது. அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும் அதை ஒட்டி தான் இருக்கின்றன. காவிரி நடுவர் நீதிமன்றம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்சநீதிமன்றம் என பிரச்னை சுழன்று கொண்டு தான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் சட்ட போராட்டம் நடத்தி, அதில் நீதியை பெற்று, பின்னர் அதை அமல்படுத்த அடுத்தக்கட்ட சட்ட போராட்டத்தை தமிழகம் செய்து வருகிறது. அதன் பின்னரும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. பிரச்னைக்கு ஓய்வு கொடுக்கவும் சில அரசியல்வாதிகள் விடுவது இல்லை. அப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கையை... அரசியல் ஸ்ட்ண்ட்டை செய்து வருபவர் கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்.

மேகதாது அணை அரசியல்
புத்தாண்டின் அதிரடியாக... மேகதாது அணை விவகாரத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு வலம் வர ஆரம்பித்துவிட்டார். காவிரி விவகாரத்தில் அடிக்கடி ரஜினியை கோர்த்து விட்டு... அரசியல் செய்பவர்.

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை
தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கையை முன்னெடுப்பவர் என்ற விமர்சனமும் வாட்டாள் நாகராஜ் மீது உண்டு. சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வாட்டாள் நாகராஜ் அவ்வப்போது தமிழகத்திற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அணை கட்டுவதாக அறிவிப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்த முயற்சிக்கு மத்திய அரசும் ஆதரவு கொடுத்து வருவதை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந் நிலையில் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டாவிட்டால் நாங்களே கட்டுவோம் என வாட்டாள் நாகராஜ் பேசியிருக்கிறார்.

தமிழகம் மீது குற்றச்சாட்டு
பெங்களுருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருகிறது. அதனை கண்டித்து நாளை கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

பணிகளை தொடங்க வேண்டும்
மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்க வேண்டும். இல்லை எனில் தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.

முற்றுகை போராட்டம்
ஏற்கனவே கர்நாடகா, தமிழகம் இடையே காவிரி பிரச்னை முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. அதன் மறு வடிவமாக மேகதாது அணை விவகாரமும் இணைந்துள்ளது. இந்தசூழ்நிலையில், நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது, இரு மாநில எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications