கர்நாடகா: பாஜக எம்எல்ஏ கோபாலகிருஷ்ணா திடீர் ராஜினாமா- காங்-க்கு தாவுகிறார்- டெல்லி 'தலை'கள் ஷாக்!
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணா தமது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸ் கட்சியில் கோபாலகிருஷ்ணா இணைய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவில் மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 123 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுவிட்டது. ஜேடிஎஸ் கட்சி 93 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 224 தொகதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது.
கர்நாடகாவில் கடந்த் சில மாதங்களாகவே தேர்தல் களம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குதல், எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்தல் ஆகிய புகார்கள் பாஜகவை நோக்கித்தான் வரும். ஆனால் கர்நாடகாவில் ஆளும் பாஜகவோ, காங்கிரஸ் மீது புகார் கூறி வந்தது.
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவக்குமார் எங்கள் எம்.எல்.ஏக்களுடன் பேசி வருகிறார். பாஜக எம்.எல்.ஏக்களுக்கு சீட் தருவதாக பேரம் பேசுகிறார் என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதனை சிவக்குமார் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணா திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகா மாநில சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதனையடுத்து கோபாலகிருஷ்ணா காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
அண்மையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை கோபாலகிருஷ்ணா சந்தித்து பேசியிருந்தார். 1997, 1999, 2004, 2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோபாலகிருஷ்ணா. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராத காரணத்தால் பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏ.வானார். தற்போது மீண்டும் காங்கிரஸுக்கே திரும்புகிறார் கோபாலகிருஷ்ணா. இது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications