கர்நாடகா தேர்தல் களத்தில் 75% இடஒதுக்கீடு ஆயுதத்தை கையில் எடுத்த காங்கிரஸ்- கதி கலங்குது பாஜக!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லாத பாஜக கட்சி கதிகலங்கிக் கொண்டிருக்கிறதாம்.
கர்நாடகாவில் சமூக நீதி, இடஒதுக்கீடு குரல்கள், தேர்தல் களத்தில் உரத்து கேட்கின்றன. கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; அதன் விவரங்களை மத்திய பாஜக அரசு ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்திருந்தார்.

தற்போது கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அனைவருமே இடஒதுக்கீடு, சமூக நீதி பிரச்சனையை பேசி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 75% இடஒதுக்கீடு விவகாரம், கர்நாடகாவில் பாஜக வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது என்றே கூறப்படுகிறது.
கர்நாடகாவில் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்குமான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும். தகுதி வாய்ந்த அனைத்து ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாக போகக் கூடாது என்பது நடைமுறை. இதனை மாற்றி அனைத்து ஜாதியினருக்குமான இடஒதுக்கீடு அளவை 75% ஆக உயர்த்துவோம் என சித்தராமையா கூறியுள்ளார்.
ஆனால் மத்திய அமைச்சரான பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே, சித்தராமையாவின் இந்த வாக்குறுதியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கூறுகையில், நாட்டில் இடஒதுக்கீடு அளவு 50% என உள்ளது. அதெப்படி சித்தராமையாவால் மட்டும் 75% இடஒதுக்கீடு என உறுதி அளிக்க முடியும்? கர்நாடகா மாநில மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் சித்தராமையா. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் சித்தராமையாவும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் என்றார்.
இதற்கு சித்தராமையாவும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, இடஒதுக்கீடு அளவு 50%-க்கும் அதிகமாக போகக் கூடாது என்கிறாரே மத்திய அமைச்சர் ஷோபா.. அப்படியானால் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை எப்படி பாஜக அதிகரித்ததாம்? இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜகவுக்கு உண்மையான நம்பிக்கை எதுவும் இல்லை என்றார்.
அதேபோல, இடஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது காங்கிரஸுக்கான தேர்தல் பிரச்சனை அல்ல. சமூக நீதி, இடஒதுக்கீடு என்பது காங்கிரஸுக்கான சித்தாந்தம், கொள்கை. பாஜகதான் தேர்தல் கால அரசியல் விளையாட்டுகளை அரங்கேற்றும் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
இன்னொரு பக்கம், இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தரவுகளைத்தான் கேட்கிறது; அப்படியான தரவுகள் காங்கிரஸிடமோ அரசியல் கட்சிகளிடமோ இருக்கிறதா? எனில் இல்லை. ஆகையால் இடஒதுக்கீடு அதிகரிப்பு முழக்கம் என்பது தேர்தல் கால வாக்குறுதிதான் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், காங்கிரஸ் அல்லது பாஜகவின் தோளில் ஏறி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என கனவு காணும் ஜேடிஎஸ் கட்சியும் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது. ஜேடிஎஸ் கட்சி ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தை கர்நாடகாவில் இருந்து வெளியேற்றுவோம்; இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் துறை இடஒதுக்கீடு தொடர்பாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications