கர்நாடகா தேர்தல்.. ஜரூராக பாஜக.. 20,000 டாக்டர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக பெங்களூரில் டிசம்பர் 18-ந் தேதி பாஜகவின் பல்வேறு அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவில் உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் படுதீவிரமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கக் கூடிய வலிமை உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. இமாச்சல பிரதேச வெற்றியைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் அறுவடை செய்ய வேண்டும் என வியூகம் வகுக்கிறது காங்கிரஸ். இந்த தேர்தலின் மூலம் கிங் மேக்கர் எப்போதும் தாங்கள்தான் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறது கவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம்.

கர்நாடகா தேர்தல் களம்
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ஒக்கலிகா கவுடா, லிங்காயத் எனும் இரு பெரும் சமூகங்களே பிரதான வாக்கு வங்கிகள். ஒக்கலிகா கவுடா சமூக வாக்குகள், காங்கிரஸ் பிளஸ் ஜேடிஎஸ் என பிரிந்து நிற்கிறது. லிங்காயத் சமூக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு போகும் என்பது ஆரூடம் மட்டுமல்ல யதார்த்தமும். இந்த களநிலவரத்தை குழப்பியடிக்க இம்முறை பாஜகவுக்கு உதவும் வகையில் ஆம் ஆத்மி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடப் போகிறதாம். அதேபோல் ஓவைசி கட்சியும் கர்நாடகாவில் களமிறங்கும். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்.

காங். மும்முரம்
இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் படுதீவிரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரான, கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே பதவி வகித்து வருகிறார். அவருக்கு இந்த தேர்தல் கவுரவ பிரச்சனை. டெல்லியில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் கார்கே.

பாஜக மெகா வியூகம்
இன்னொரு பக்கம் பாஜக, பல்வேறு ஜாதி சமூகத் தலைவர்களுடன் இடைவிடாமல் ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 20,000 பேர் பங்கேற்கும் மாநில மாநாட்டை பெங்களூரில் நடத்துகிறது பாஜக. பெங்களூரில் வரும் 18-ந் தேதி இந்த மாநாடு நடைபெற உள்ளது. நாள்தோறும் மக்களை சந்திக்கக் கூடிய இந்த செக்டாரை வளைப்பதன் மூலம் வாக்குகளை எளிதாக பெற முடியும் என்பது பாஜகவின் கணக்கு. இதனால் பாஜகவின் இந்த மாநாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகா அரசியல்
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவை 113 இடங்கள். 2018-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 இடங்களைப் பெற்றன. பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏக்கள் இல்லை. முதலில் பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில் பாஜகவின் எடியூரப்பா முதல்வரானார். பின்னர் ராஜினாமா செய்தார். பின்னர் ஜேடிஎஸ்-காங்கிரஸ் ஓராண்டு ஆட்சி செய்தது. அந்த ஆட்சியை கவிழ்த்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மீண்டும் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்டு தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications