டெல்லி பெருந் தலைகளால் அனல் பறந்த கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம்- நாளை மாலையுடன் ஓய்வு!
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரங்களால் கர்நாடகா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கக் கூடும் என சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன; ஆனால் பெரும்பாலான கருத்து கணிப்புகள், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் எனவும் கூறி வருகின்றன. ஒருசில கருத்து கணிப்புகள், தொங்கு சட்டசபை உருவாகலாம்; இதனால் ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராகக் கூடிய சாத்தியம் உள்ளது என தெரிவித்துள்ளன.
இத்தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பெரும் தலைவர்கள் பட்டாளம் பிரசாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தரப்பும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்ததால் தேர்தல் ஆணையத்துக்கும் காவல் நிலையங்களுக்கும் புகார்கள் பறந்தன.
பிரதமர் மோடி பிரம்மாண்ட ஊர்வலங்களை கர்நாடகா தேர்தல் களத்தில் நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரம்மாண்ட ஊர்வலத்தை நடத்தினார். இன்று கர்நாடகாவில் பிரியங்கா காந்தி காட்டமான தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கர்நாடகா தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் அறிக்கைகள் மிக முக்கியத்துவமான பங்களிப்பை செய்துள்ளன. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசுபொருளாகி இருக்கின்றன. இரு கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கின்றன.
கர்நாடகாவில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனையடுத்து தொகுதியில் வாக்காளர் அல்லாத பிற பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் அனைவரும் வெளியேற்றப்படுவர். பிரசாரம் முடிவடையும் நிலையில் கருத்து கணிப்புகள் வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications